உக்ரைன் ரஷியா இடையேயான போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனிடையே, கிறிஸ்தவ மதத்தினரின் முக்கிய நிகழ்வான ஈஸ்டர் பண்டியையொட்டி 30 மணிநேரம் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷிய அதிபர் புதின் தாமாக முன்வந்து அறிவித்தார். சனிக்கிழமை மாலை 6 முதல் ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிவரை உக்ரைன் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று ரஷியா அறிவித்தது. இந்நிலையில், தற்காலிக போர் நிறுத்தத்தை மீறி ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். எல்லை நகரங்களான குர்ச்க், பெல்கொரெட் போன்ற மாகாணங்களில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
