ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கொடிய தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்தது. இது நம் அனைவரையும் மிகவும் காயப்படுத்தி அதிர்ச்சியடையச் செய்தது. இந்த கோழைத்தனமான பயங்கரவாதச் செயலையும் அதற்குப் பொறுப்பானவர்களையும் காங்கிரஸ் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த தாக்குதல் நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் மீதான நேரடித் தாக்குதல். 2000 ஆம் ஆண்டு நடந்த கொடூரமான சிட்டிசிங்புரா படுகொலைக்குப் பிறகு, பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் மேற்கொண்ட மிகவும் வெட்கக்கேடான மற்றும் மூர்க்கத்தனமான முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும். நிராயுதபாணியான மற்றும் அப்பாவி பொதுமக்களைக் கொன்றவர்கள் மனிதர்களாக இருக்க முடியாது என்பதை நாங்கள் உறுதியாக மீண்டும் வலியுறுத்துகிறோம். நேற்று மாலையில் காஷ்மீரில் இருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனும், ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் அங்குள்ள காங்கிரஸ் தலைவர்களுடனும் பேசினேன். பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதிக்க ஏப்ரல் 24 ஆம் தேதி காலை 11 மணிக்கு டில்லியில் உள்ள ஏஐசிசி அலுவலகத்தில் காங்கிரஸ் செயற்குழு கூடும் என்று தெரிவித்தார். இது கட்சி அரசியலுக்கான நேரம் அல்ல என்று கூறிய கார்கே, “இந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துவதன் மூலம் உயிர் இழந்தவர்களுக்கும் அவர்களின் துக்கமடைந்த குடும்பத்தினருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான கூட்டுத் தீர்மானத்திற்கான தருணம் இது” என்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.
“இந்த நேரத்தில் நாம் அனைவரும் அரசாங்கத்துடன் ஒன்றுபட்டுள்ளோம், இதுபோன்ற சம்பவங்கள், பயங்கரவாதிகள் மற்றும் நமக்கு எதிராகப் போராடுபவர்களை ஒன்றாக எதிர்த்துப் போராட வேண்டும். நாட்டைக் காப்பாற்றவும், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காகவும் நாம் ஒன்றாக இருப்போம்” என்று கூறினார். மேலும் “பயங்கரவாதியை வேட்டையாடுவதற்கு அரசாங்கம் தனது முழு பலத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம், கிட்டத்தட்ட 22 மணி நேரம் ஆகிறது. ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு ஏற்பாட்டில் சுற்றுலாப் பயணிகளின் நம்பிக்கையைப் பேண அரசாங்கம் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.