காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் நகரின் பைசாரன் மலைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் அப்பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் பலர் கொல்லப்பட்டிருப்பது, காயமடைந்திருப்பது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு இஸ்ரேல் உறுதுணையாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.
