ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கொடிய தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் உடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் காஷ்மீரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன்பின் தாக்குதல் தொடர்பாக பேசிய அவர், பஹல்காமில் நடந்த கோழைத்தனமான செயலில் பல அப்பாவி உயிர்களை இழந்தோம். நாங்கள் மிகவும் துயரத்தில் ஆழ்ந்துள்ளோம். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியை நான் மீண்டும் கூற விரும்புகிறேன். பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் கொண்டுள்ளோம். அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதை நாட்டு மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இந்தச் செயலைச் செய்தவர்களை மட்டுமல்ல, இதற்கு பின்னால் உள்ளவர்களையும் நாங்கள் கண்டுபிடிப்போம். குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் அதற்கான பலனை காண்பார்கள் என நாட்டிற்கு உறுதியளிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.
