காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில், அமெரிக்கர்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களும், வன்முறை சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் வன்முறை சம்பவங்கள் நடப்பது இயல்பாகி விட்டது.
காஷ்மீரில் உள்ள சுற்றுலா பகுதிகளான ஸ்ரீநகர், குல்மார்க், பஹல்காம் ஆகிய இடங்களிலும் தாக்குதல்கள் நடக்கின்றன. ஆகவே, அமெரிக்கர்கள் யாரும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு செல்ல வேண்டாம். (கிழக்கு லடாக் மற்றும் அதன் தலைநகரான லேவுக்கு செல்ல விலக்கு அளிக்கப்படுகிறது). மேலும், துப்பாக்கி சண்டை நடக்க வாய்ப்புள்ளதால், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கி.மீ. தூரத்துக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.