திக்கம் வடிசாலை தொடர்பாக சொல்லப்படுவது அப்பட்டமான பொய் என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், அரசியல் நோக்கங்களுக்காக திட்டமிட்டு தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாவும் தெரிவித்தார்.
யாழ். ஊடக மையத்தில் 26.04.2025 அன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
“திக்கம் வடிசாலையை வெளிநாட்டு தனியார் நிறுவனத்திடம் கையளிப்பதற்கான ஒப்பந்தத்துடன் எமது செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களையும் சம்மந்தப்படுத்தும் வகையில் சில ஊடகங்களி்ல் செய்தி வெளியாகியுள்ளது.
உண்மையில், பனை அபிவிருத்தி சபையுடன் சம்மந்தப்பட்டவர்களினால் அவ்வாறான தகவல் வெளிப்படுத்தப்பட்டிருப்பின், அதில் எந்தவித உண்மைளும் இல்லை என்பதை பொறுப்புடன் கூறவிரும்புகின்றோம்.
உண்மையில், கடந்த அரசாங்க காலத்தில் கைத்தொழில் சார்ந்த துறைசார் அமைச்சிற்கும் குறித்த வெளிநாட்டு நிறுவனத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்தவிடாமல் தடுத்து வைத்திருந்ததே எமது செயலாளர் நாயகம் அவர்கள்தான் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
இல்லாதுவிட்டிருந்தால், திக்கம் வடிசாலையை குறித்த நிறுவனம் பொறுப்பெடுத்து தமது செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கும்.
தோழர் டக்ளஸ் தேவானந்தாவை பொறுத்தவரையில், எமது வளங்கள் – எமது தனித்துவ அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உணர்வுபூர்வமாக உறுதியான நிலைப்பாட்டை உடையவர்.
அதனடிப்படையில் திக்கம் வடிசாலை வெளிநாட்டு நிறுவனத்தின் கைகளுக்கு செல்லுமாயின், அதனால் கிடைக்கும் வருமானத்தின் கணிசமான பகுதி அவர்களினால் எடுத்துச் செல்லப்பட்டுவிடும் என்பதுடன், வருமான நோக்கங்களுக்காக முதலீட்டாளர்களினால் எமது பிரதேச உற்பத்திகளின் தனித்தவத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் அபாயம் இருப்பதை உணர்ந்து கொண்டு, திக்கம் வடிசாலை எமது பிரதேசங்களை சேர்ந்த துறைசார் சங்கங்களிடம் ஒப்படைக்கப்பட்டு வடிசாலை செயற்பாடுகளை விருத்தி செய்வதற்கான ஒத்தாசைகளை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்து வருகிறார்.
அதனடிப்படையில் கடந்த அரசாங்க காலத்தில் வெளிநாட்டு நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இரத்து செய்வதற்கான புறச்சூழல்களை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கடந்த வருடம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தது.
இருந்தபோதிலும், ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்கா தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவரை சந்தித்த எமது செயலாளர் நாயகம், கடந்த அரசாங்கத்தில் முன்னெடுக்க தீர்மானி்க்கப்பட்ட நிலையில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பான பட்டியலை ஜனாதிபதியிடம் கையளித்திருந்தார். அந்த பட்டியலில் திக்கம் வடிசாலை விவகாரமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் திக்கம் வடிசாலை விவகாரத்தில் எமது செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா தவறான முறையில் சம்மந்தப்பட்டிருப்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுடன்,
துறைசார் அமைச்சினால் உரிய நியமங்களை பின்பற்றி செய்யப்பட்ட ஒப்பந்தம் ஒன்றை பனை அபிவிருத்தி சபை பணிப்பாளர் சபையின் தீர்மானத்தினால் இரத்து செய்ய முடியும் என்பதும் மக்களை ஏமாற்றும் கருத்தாகவே இருக்கின்றது” என்று சுட்டிக்காட்டினார்.