காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. அதில் முக்கியமாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலகியுள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு பாயும் சிந்து நதியை இந்தியா நிறுத்தியுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை போருக்கான அறிவிப்பு என பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது.
அதேவேளை, பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நடுநிலையான, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய விசாரணைக்கு தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தியாவை தாக்க அணு ஆயுதங்கள் தயாரக இருப்பதாக பாகிஸ்தான் மந்திரி ஹனிப் அப்பாசி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தினால் அந்நாடு போருக்கு தயாராக வேண்டும். நம்மிடம் உள்ள ராணுவ ஆயுதங்களும், ஏவுகணைகளும் பார்வைக்கு வைக்க அல்ல. நாட்டின் எந்தெந்த பகுதிகளில் நாம் அணு ஆயுதங்கள் மறைத்து வைத்துள்ளோம் என்று யாருக்கும் தெரியாது. நம்மிடம் உள்ள அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகள் அனைத்தும் இந்தியாவை நோக்கி மட்டுமே உள்ளன. இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளன’ என்றார்.