அயோத்தி, கருடன், நந்தன்’ உள்ளிட்ட வெற்றிப்படங்களையடுத்து சசிகுமார் தற்போது நடித்துள்ள படம் ‘டூரிஸ்ட் பேமலி’. இந்த படத்தை ‘குட் நைட்’ படத்தினை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. அபிஷன் ஜீவிந்த் இயக்கும் இந்தப் படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. அதில் இலங்கைத் தமிழர்களாக நடித்துள்ள சசிகுமார் சிம்ரனின் இலங்கை தமிழ் பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படம் வருகிற மே 1-ந் தேதி வெளியாக உள்ளது. படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் வெளியீடு சென்னையில் நடைப்பெற்றது. படத்தின் புரோமோசன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் வெளியீடு நிகழ்ச்சியில் சசிகுமார், விஜய் ஆண்டனி, சமுத்திரகனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் பேசிய சமுத்திரகனி, “இந்தப் படத்தைப் பார்த்தபோது மிகவும் கனமாக இருந்தது. அன்பை, அறத்தை போதிக்கக்கூடிய திரைப்படமான ‘டூரிஸ்ட் பேமிலி’ இந்த நூற்றாண்டின் சிறந்த படம். படத்தின் கிளைமேக்ஸில் கண்ணீர் வந்துகொண்டே இருந்தது. சசிகுமாரைப் பார்த்து கையெடுத்து கும்பிட வேண்டும்போல் இருக்கிறது. இப்படத்தை முன்பே பார்த்திருந்தால், நானும் ஏதாவது வேலை செய்திருப்பேன். இதுவரை யாருமே இப்படியொரு படத்தை எடுக்கவில்லை. சசிகுமாருக்கு சுப்ரமணியபுரம் அமைந்ததுபோல், எனக்கு நாடோடிகள் அமைந்ததுபோல், அபிஜனுக்கு ‘டூரிஸ்ட் பேமிலி'” எனத் தெரிவித்துள்ளார்.
