இராணுவத்தினரது ஆக்கிரமிப்பில் உள்ள, மாமனிதர் தராகி சிவராம் அவர்களினால் கிளிநொச்சி அறிவியல் நகரில் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட ஊடக கல்லூரி வளாகத்தை உடனடியாக விடுவித்து அதனை யாழ். பல்கலைக் கழகத்தின் கீழ் தனி அலகாக கொண்டுவந்து ஊடக கற்கை பீடமாக தொடர்வதற்குரிய நடவடிக்கைகளினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம,; தமிழ் ஊடகத்துறையினர் சார்பில் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தினராகிய நாம் வினயமாக கேட்டுக் கொள்கின்றோம் என வடமராட்சி ஊடக இல்லம் தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஊடகவியலாளர் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும்!
இலங்கையில் இடம்பெற்ற சகல ஊடகவியலாளர் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படுவதன் மூலம் நீதியை நிலைநாட்ட புதிய அரசாங்கம் முன்வர வேண்டும் என யாழ். வடமராட்சி ஊடக இல்லம் வலியுறுத்தி நிற்கின்றது.
இலங்கையின் மிக முக்கிய ஊடகவியலாளர்களில் ஒருவராக சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்கிய மாமனிதர் தராகி சிவராம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு 20 ஆண்டுகள் கடந்தும் இன்றுவரை உரிய விசாரணைகள் எவையும் இன்றி ஆட்சிகள் மாறினாலும் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமலும், அதற்கான நீதி பொறிமுறை உருவாக்கப்படாமலும் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டு வருகின்றமை இலங்கையின் உள்ளக பொறிமுறைக்குட்பட்டதான பாதுகாப்பு மற்றும் நீதித்துறை மீதான ஐயப்பாட்டினை வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் துப்பாக்கி முனையில் இடம்பெற்ற படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள், கைதுகள் உள்ளிட்ட செயற்பாடுகள் மூலம் தமிழ் ஊடகத்துறையை அச்சுறுத்தி அடக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டு வந்த முனைப்புகள் தற்போதும் புதிய புதிய வடிவங்களில் தொடர்ந்தே வருகின்றன. தமிழ் மக்களின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்து வரும் ஊடகத்துறையை நசுக்குவதன் ஊடாக தமிழர்களின் குரலை மௌனிக்கச் செய்யும் நோக்கிலேயே இவை தொடர்கின்றன.
இவ்வாறான செயற்பாடுகளின் பின்னணியில் இலங்கை அரச படைகள் மற்றும் அவர்களோடு சேர்ந்து இயங்கிய துணை ஆயுதக்குழுவினருமே இருந்துள்ளனர் இருந்து வருகின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
அவ்வாறு இருந்தும் நிமலராஜன் முதல் சிவராம் உட்பட பல ஊடகவியலாளர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டு காணமல் ஆக்கப்பட்டமையுடன் தொடர்புடைய குற்றவாளிகளான மேற்குறித்த எவரொருவரும் நீதி பொறிமுறை ஊடாக கண்டுபிடிக்கப்படாத நிலையே தற்போதுவரை தொடர்கின்றது.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்துறை மீதான இவ்வாறான அச்சுறுத்தல் நிலையானது இலங்கையில் நிலவும் ஊடக சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்பவற்றின் மீதான கொடூரமான அடக்குமுறையின் வெளிப்பாடாகும்.
கொலைக் கலாசாரதத் pன் பின்னணியில் ஊடகத்துறை மீதான இவ்வாறான தலையீடுகள் தொடர்வதனை உடனடியாக தடுத்து நிறுத்துவதுடன் இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் இதுவரைகாலமும் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை மூலம் நீதியை நிலைநாடட் புதிய அரசாங்கம் உடனடியாக முன்வர வேண்டும் என, படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் தராகி சிவராம் மற்றும் செல்வராசா ரஜிவர்மன் ஆகியோரின் நினைவு நாளில் யாழ். வடமராட்சி ஊடக இல்லம் வலியுறுத்தி நிற்கின்றது.
இதேவேளை, தற்போது இராணுவத்தினரது ஆக்கிரமிப்பில் உள்ள, மாமனிதர் தராகி சிவராம் அவர்களினால் கிளிநொச்சி அறிவியல் நகரில் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட ஊடக கல்லூரி வளாகத்தை உடனடியாக விடுவித்து அதனை யாழ் பல்கலைக் கழகத்தின் கீழ் தனி அலகாக கொண்டுவந்து ஊடக கற்கை பீடமாக தொடர்வதற்குரிய நடவடிக்கைகளினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் தமிழ் ஊடகத்துறையினர் சார்பில் நாம் வினயமாக கேடடுக் கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.