அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவை விதி எண் 110-ன் கீழ் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் 9 அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: அரசு ஊழியர்கள் நிர்வாகத்தின் தூண்களாக, அரசின் கரங்களாக விளங்கி வருகிறார்கள். திராவிட மாடல் அரசு சிறப்பாக செயல்பட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணி முக்கிய காரணம். அரசு நலத்திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் செல்ல பணி செய்வது அரசு ஊழியர்கள்தான். அரசு ஊழியர்களின் நலன் கருதி 9 அறிவிப்புகளை வெளியிடுகிறேன். 1. கொரோனா தொற்று காலத்தில் நிறுத்தப்பட்ட விடுப்பு நாட்களை 15 நாட்கள் வரை சரண்டர் செய்று 1-4-2025 முதல் பணப்பயன் பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் 8 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ.3,500 கோடியை அரசு ஒதுக்கும். 2. 1-1-2025 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறது. தமிழக அரசு ஊழியர்களுக்கும் 2 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படும். இதன் மூலம் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக ஆண்டுக்கு ரூ.1,252 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்படும். 3. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பண்டிகைப்படி ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் உயர்த்தப்படும். இதனால், 8 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள். 4. அரசு பணியாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் தொழில்கல்விக்கு ரூ.1 லட்சமாகவும், கலை – அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு ரூ.50 ஆயிரமாகவும் உயர்த்தப்படுகிறது. 5. அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு திருமண முன்பணம் பெண் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம், ஆண் ஊழியர்களுக்கு ரூ.6 ஆயிரம் என்று வழங்கப்படுகிறது. இது ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். 6. பொங்கல் பண்டிகைக்கு சி, டி பிரிவு அரசு ஊழியர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பரிசு தொகை ரூ.500-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்படுகிறது. 7. ஓய்வூதியதாரர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.4000-ல் இருந்து ரூ.6000 ஆக உயர்த்தப்படுகிறது. 8. பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆராய 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தனது அறிக்கையை 9 மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதாவது, செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அளிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 9. பெண் பணியாளர்களுக்கான மகப்பேறு விடுப்பு 1-7-2024 முதல் ஓராண்டாக உயர்த்தப்பட்டுள்ளது. அது அவர்களின் பதவி உயர்வை பாதிப்பதாக கூறப்பட்டது. எனவே, மகப்பேறு விடுப்பு காலமும் தகுதிகாண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.