தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் புதிய இணையதளம் தொடங்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான வேலுவின் மகளின் திருமணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்திப் பேசிய மு.க.ஸ்டாலின், “இன்று திருமணம் செய்து கொள்ளும் மணமக்களை நான் கேட்டுக்கொள்கிறேன், உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும், அதற்கான பொருளும் அடங்கிய இணையதளம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும்” என்று பதிவிட்டுள்ளார். முதல்-அமைச்சரின் அறிவிப்புக்கு தமிழ் மொழி ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.