ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் ‘சச்சின்’. இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி கடந்த 18-ந் தேதி மறு வெளியீடு செய்யப்பட்டது. 4 கே தரத்தில் வெளியான இப்படத்தை விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இப்படம் மறு வெளியீடு மாபெரும் வசூல் சாதனை செய்தது. இந்த நிலையில், சச்சின் படத்தின் வெற்றியை குறித்து பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, மக்கள் இப்படத்தை இவ்வளவு பெரிய அளவில் ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. திரையரங்குகளில் புதுப்படம் போல் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது. 2005-ம் ஆண்டில் வெளியானது போலவே மறுவெளியீட்டிலும் மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, நான் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க முடிவு செய்திருக்கிறேன். அதாவது, விரைவில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘காக்க காக்க’ ஆகிய படங்களை இந்த ஆண்டுக்குள் மறு வெளியீடு செய்யவுள்ளேன். அடுத்த ஆண்டில், ரசிகர்களின் விருப்பப்படி ரஜினிகாந்த்தின் ‘கபாலி’, விஜய்யின் ‘தெறி’, மற்றும் பாரதிராஜா இயக்கிய ‘கிழக்கு சீமையிலே’ ஆகிய படங்களை மறு வெளியீடு செய்யத் திட்டமிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
