இந்தியாவுடனான பதட்டங்கள் அதிகரித்துள்ளநிலையில், நிதானத்தைக் கடைப்பிடிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது, ஆனால் சர்வதேச சட்டத்தின் கீழ் தற்காப்புக்கான அதன் உரிமையைப் பயன்படுத்தி, தாக்கப்பட்டால் அது “வலுவாகவும்” “தீர்க்கமாகவும்” பதிலளிக்கும் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது. பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை இந்தியா குற்றம் சாட்டி வருவதுடன், அந்த நாட்டுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. அதேநேரம் இந்த தாக்குதலுக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் வழக்கம்போல மறுத்து வருகிறது. இதை நேற்று மீண்டும் பாகிஸ்தான் கூறியுள்ளது. முன்னதாக அந்த நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர், வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் கூட்டாக இதை தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், ‘எந்த வகையிலான பயங்கரவாதத்தையும் பாகிஸ்தான் கண்டிக்கிறது. அப்பாவி மக்கள் உயிரை பறிப்பதை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது. பஹல்காம் தாக்குதல் உயிரிழப்புகளுக்கு நாங்களும் கவலையை வெளியிட்டு இருக்கிறோம். நாங்களும் எங்கள் இரங்கலை தெரிவித்தோம்’ என தெரிவித்தனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு ஒரு சிறிய ஆதாரமும் இல்லாமல், நம்ப முடியாத வேகத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக தெரிவித்த அவர்கள், பாகிஸ்தானுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், நாங்கள் ஆரம்பத்திலிருந்தே அதைத்தான் கூறி வருகிறோம் என்றும் கூறினர். அதேநேரம் பாகிஸ்தானை சீண்டினால் பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.