இதுவரை ரூ.364.93 கோடி மதிப்பில் 13 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் அறிவிப்புகள் குறித்து, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில், கிண்டியில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அமைச்சர் பேசியதாவது; “சிட்கோ-வை பொறுத்தவரை இதுவரை ரூ.364.93 கோடி மதிப்பில் 13 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளது. ரூ.643.18 கோடி மதிப்பில் 22 தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற்பேட்டைகளில் முதல் கட்டப்பணிகளை வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடித்து திறப்பு விழாவிற்கு கொண்டுவர வேண்டும். தொழில் வணிகத்துறை மற்றும் சிட்கோவினால் செயல்படுத்தப்படும் குறுங்குழும திட்டம் கிராமப்புற வேலை வாய்ப்பை உறுதி செய்யும் திட்டமாகும். அதில் ரூ.44.14 கோடி மானியத்தில், ரூ. 54.08 கோடி திட்ட மதிப்பீட்டில் இதுவரை 11 குறுங்குழுமங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் முந்திரி தொழில், அச்சுத் தொழில், புகைப்பட தொழில், அச்சு வார்ப்பு, கயிறு, உப்பு, உணவு என பல்வேறு தொழில் புரிவோர் பயனடைந்து வருகிறார்கள். அந்த வகையில் ரூ. 120.79 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் 22 குறுங்குழுமங்களுக்கான பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டினை கொண்டாடும் விதமாக தொடங்கப்பட்ட கலைஞர் கடன் உதவி திட்டத்தில் 30 நபர்களுக்கு தொழில் தொடங்க ரூ 4.47 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை மேலும் அதிகரிக்க வேண்டும். அதிக நபர்களுக்கு கடன் உதவி வழங்க வேண்டும். அதுபோல், கலைஞர் கைவினைத் திட்டத்திலும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் எய்தி, திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட வேண்டும். உலக முதலீட்டாளர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் படி இதுவரை ரூ. 25,748 கோடி மதிப்பில் 2,373 நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள நிறுவனங்களை தொடங்க மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ” எனத் தெரிவித்தார்.