ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா தன் ராணுவ பலத்தை காட்டியுள்ளது. நமது முப்படைகளும் ராணுவத்தினர் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். அப்பாவி மக்களை கொலை செயதவர்களைத்தான் ராணுவம் அழித்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்திய பாதுகாப்புப் படை வரலாறு படைத்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் முழு வெற்றி அடைந்துள்ளது. பயங்கரவாதிகளின் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்துள்ளோம். இலக்கு எதுவாக இருந்ததோ அதை துல்லியமாக தாக்கி அழித்துள்ளோம். எங்கள் நடவடிக்கை மிகுந்த சிந்தனையுடன், திட்டமிடப்பட்ட முறையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்து, தாக்குதல் நடத்திய வீரர்களுக்கு துணை நின்ற பிரதமர் மோடிக்கு நன்றி. பிரதமர் மோடியின் தலைமையே இந்திய ராணுவம் துல்லியமாக பதில் தாக்குதல் நடத்த காரணம்.
பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்த இந்திய ராணுவத்திற்கு முழு உரிமை உண்டு. சிறப்பாக செயல்பட்ட ராணுவ வீரர்களுக்கு சல்யூட். இந்திய வீரர்கள் தங்களது முழு தீரத்தை வெளிப்படுத்தி உள்ளனர். அசோக வனத்தை அழிக்கும்போது அனுமன் பின்பற்றிய லட்சியத்தை நாங்கள் பின்பற்றுகிறோம். நமது படைகளில் துணிச்சலுக்கு மீண்டும் ஒருமுறை தலை வணங்குகிறேன். இன்று தொடங்கி வைக்கப்படும் திட்டங்கள் நாட்டின் எல்லையை வலுப்படுத்தும் வகையில் இருக்கும். இந்த திட்டங்களால் நாடு வளர்ச்சி பாதையில் பயணிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.