பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தால் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடங்கப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் தற்காப்பு நடவடிக்கையை இஸ்ரேல் ஆதரிக்கிறது. அப்பாவிகளுக்கு எதிராக கொடூரமான குற்றங்களை நிகழ்த்திவிட்டு தங்களால் தப்ப முடியாது என்பதை பயங்கரவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
