தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கடந்த 2019 மக்களவை தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட பரப்புரையினால் அமோக வெற்றி கிடைத்தது. அதனைத் தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தி.மு.க. ஆட்சி அமைந்து, இன்று ஐந்தாம் ஆண்டில் காலடி பதித்து மகத்தான சாதனைகளை புரிந்து வருகிற நிலையில் திசையெங்கும் மக்கள் பாராட்டுகிற மகத்தான ஆட்சி புரிகிற முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனதார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். 2021-ல் ஆட்சி அமைந்தபோது, 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி கடன் சுமையோடு அ.தி.மு.க. ஆட்சியை தி.மு.க.விடம் விட்டுச் சென்றது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.69 சதவீதமாக உயர்ந்து மத்திய பா.ஜ.க.
அரசின் வளர்ச்சியான 6.5 சதவீதத்தை விட உயர்ந்து சாதனை படைத்திருக்கிறது. தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ரூபாய் 17 லட்சத்து 23 ஆயிரம் என்றளவிற்கு உயர்ந்து இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டின் தனிநபர் சராசரி வருமானம் 2024-25ல் ரூபாய் 3.58 லட்சம். ஆனால், தேசிய சராசரி தனிநபர் வருமானம் ரூபாய் 2.6 லட்சமாக குறைவாக இருக்கிறது. அந்த வகையில் நாடே போற்றுகிற வகையில் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போட்டு வருவதை பொருளாதார வல்லுநர்கள் பாராட்டுகிறார்கள். தமிழ்நாட்டின் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்தி, மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி புரிந்து வருகிற தமிழ்நாடு முதல்வர் மேற்கொள்கிற சுற்றுப் பயணங்களில் மக்கள் அலை அலையாக திரண்டு வந்து அன்பையும், ஆதரவையும் பொழிந்து வருகிறார்கள். இதை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க., அ.தி.மு.க.வைப் போன்ற தமிழக விரோத கட்சிகள் காழ்ப்புணர்ச்சி அரசியலை செய்து வருகிறார்கள். இதை முறியடிக்கிற வகையில் தி.மு.க. தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கட்டுக்கோப்பாக ஒருமித்த கொள்கை பற்றோடு செயல்பட்டு வருகின்றன. ஆனால், இந்தியா கூட்டணியை எதிர்க்கிற கட்சிகள் அணி சேர்வதில் எத்தனை தடுமாற்றங்கள், முரண்பாடுகள், சந்தர்ப்பவாதங்கள் என்பதை தமிழ்நாட்டு மக்கள் வேடிக்கை பார்த்து வருகிறார்கள்.
எனவே, தமிழ்நாடு மக்களின் பேராதரவோடு 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் தமிழ்நாட்டில் நல்லாட்சி தொடர முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் நான்காண்டு சாதனை நிச்சயம் துணை புரியும். நாளை நமதே என்பது நாளுக்கு நாள் உறுதியாகி வருகிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சரின் சாதனை பயணம் தொடர மீண்டும் வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.