கதிரோட்டம் 09-05-2025
வெள்ளிக்கிழமை
இன்றா? அல்லது நாளையா? என்று பல ஆண்டுகளாக இலங்கை வாழ் வாக்காளப் பெருமக்களும் அரசியல் கட்சிகளும் எதிர்பார்த்துக் காத்திருந்த உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் கடந்த 6ம் திகதி நடைபெற்று இன்று மூன்றாவது நாளைக் கடந்து செல்கின்றோம்.
இந்த மூன்று நாட்களும் இலங்கையில் மாத்திரமல்ல, உலகெங்கும் உள்ள தமிழர்களும் எமது மொழி சார்ந்த ஊடகங்களும் மௌனம் காப்பதும், ஊதித் தள்ளுவதுமாக வெவ்வேறு விதமாக கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட வண்ணம் நாட்கள் நகர்ந்து செல்லுகின்றன. எனினும் முன்னாள் யாழ்ப்பாண அரசாங்க அதிபரும் கவிஞரும் அரசியல் அவதானியுமான அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் தனது முகநுால்ப் பக்கத்தில் குறிப்பிட்டவாறு ‘தமிழ் மக்கள் தவிர்க்க வேண்டியவர்களைத் தவிர்த்து வாக்களிக்க வேண்டியர்களுக்கு வாக்குகளை வழங்கி அவர்களை வெற்றியீட்டச் செய்துள்ளார்கள்’ என்ற கருத்துக்களை ஏற்றுக்கொண்டவர்களும் மதிக்கின்றவர்களும் எவ்விதமான ஆர்ப்பாட்டமுமின்றி தங்கள் கருத்துக்களில் உறுதியாக உள்ளார்கள். எமது கனடா உதயன் ஆசிரிய பீடத்தினராகிய நாமும் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களது கூற்றுகளை ஏற்றுக் கொண்டவர்களாகவே உள்ளோம் என்பதை இந்தப் பக்கத்தில் பகிர்ந்து கொள்கின்றோம். ஆனால் பலரது கேள்விகளில் முக்கிய ஒன்றாக இருப்பது தமிழர்களினதும் தமிழரசுக் கட்சியினதும் ‘எதிர்காலம்’ எவ்வாறு அமையப்போகின்றது? என்பதே ஆகும்.
தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றோடு பின்னிப் பிணைந்து, தளர்ந்தும் நிமிர்ந்தும் ஏமாற்றங்களைத் தழுவியும். துரோகத்தனங்களுக்கு உள்ளாகியும் தமிழரசுக் கட்சியின் அரசியல் பாதையை கடந்த ஐம்பது வருடங்களாக அவதானித்தவர்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வியே நாம் இங்கு குறிபிட்ட ஒன்றாக விளங்குகின்றது.
நடந்து முடிந்த தேர்தலுக்கு முன்பதாகவே தமிழரசுக் கட்சிக்குள் ‘குத்து வெட்டுக்களும்’ ‘கழுத்தறுப்புக்களும்’ இடம்பெற்று தற்போது நீதி மன்றங்களில் நிர்வாக விடயங்கள் தொடர்பான வழக்குகளை தன்னகத்தே கொண்ட ஒரு ‘கோட்டு கட்சியாகவே’ தமிரசுக் கட்சி அதன் தொண்டர்களால் பார்க்கப்படுகின்றது.
மேலும், சுமந்திரன் மற்றும் சிறிதரன் சிவஞானம் போன்ற முக்கியமானவர்களுக்கு இடையில் தோன்றியுள்ள உள்ளக முரண்பாடுகள் கட்சியை சின்னாப்பிள்ளமாக்கிய நிலையில் இந்த உள்ளூராட்சித் தேர்தல் மூலம் ‘வடக்கில் தமிழரசுக் கட்சியானது உலகெங்கும் உள்ள தமிழர்களின் மனதில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திய நிலையை அடைந்துள்ளது. எனினும் ஆங்காங்கே ‘நீறு பூத்த நெருப்பாக’ உள்ள கட்சியின் எரியும் பிரச்சனைகள் எவ்வாறு தீர்க்கப்படப்போகின்றன என்பதே முக்கியமாகும்.
சிறிதரன் சிவஞானம் அவர்கள் கிளிநொச்சியில் தனது பலத்தைக் காட்டும் வகையில வாக்கு வங்கியை தனது கட்சிக்காக நிரப்பியிருந்தாலும் கட்சியில் அவரது தரமும் அவரது தரமும் பலமும் தாழ்ந்துள்ளதாகவே கருதப்படுகின்றது. தற்போது எம். ஏ. சுமந்திரன் அவர்களால் கிளறப்படும் விடயங்களையும் குழப்பங்களையும் வெற்றி கண்டு கட்சியை சீரான பாதையில் நகர்த்திச் செல்லக் கூடிய பலம் சிறிதரன் சிவஞானம் அவர்களிடத்திலோ அன்றி அவரது அணியினரிடமோ உள்ளதாகத் தெரியவில்லை. எனவே தமிழரசுக் கட்சியின் பலத்தின் அதிகளவு சுமந்திரன் அணியினரையே சென்றடையும் என்ற எதிர்வும் தமிழர்கள் பிரதேசங்களில் பகிரப்பட்டு வரும் விடயமாக உள்ளது.
சுமந்திரன் அவர்கள் திறமையானவராக இருக்கலாம். ஆனால் அவரது கடந்த கால நகர்வுகள் இரட்டை வேடம் கொண்டவையாகவும் ரணில் விக்கிரமசிங்க போன்ற ‘கொலையாளிகளின்’ நெருங்கிய நண்பர்களாகவும் காணப்படுவதால் அவரது தலைமையின் தமிரசுக் கட்சி இயங்குமானால் அந்த தலைமை தமிர்களின் இருப்பையும் அதே நேரம் தெற்கிலும் மீண்டும் ரணில் போன்ற ஓரங்கட்டப்பட்ட அரசியல்வாதிகளை உள்ளுக்குள் கொண்டு வந்து தென்னிலங்கை அரசியலையும் சீர்குலைக்கும் ஒரு ஆபத்தான அரசியலுக்குள் இலங்கையின் எதிர்காலம் சென்று விடும் என்ற எச்சரிக்கையையும் நாம் உதாசீனம் செய்துவிடக்கூடாது. எனினும் சிறிதரன் சிவஞானம் செல்வம் அடைக்கலநாதன் போன்ற அரசியல்வாதிகளும் இடதுசாரிப் போக்குக் கொண்ட தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்திவிட்டு தங்களுக்கு பல சலுகைகளைப் பெறக்கூடிய ரணில் போன்றவர்களின் ஆட்சி அமைவதையே விரும்புவார்கள் என்பதே உண்மை.
எனவே நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலின் வெற்றிகளை நிரந்தரமாக அனுபவிக்கும் வாய்ப்பை தமிரசுக் கட்சி தக்கவைக்குமா அன்றி ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகளிடம் தமிழர்களின் தலைமத்துவத்தை ஒப்படைப்பதா என்பதை தமிழர்கள் தீர்மானிக்க வேண்டும் என்பதையே எமது கதிரோட்டத்தின் வீச்சுக்களாக நாம் பதிவு செய்கின்றோம்.!