கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக வட அமெரிக்காவை சேர்ந்த கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் போப் 14-ம் லியோ என அழைக்கப்படுவார் என்று கார்டினல்கள் அறிவித்தனர். இந்நிலையில், போப் லியோ, புதிய போப்பாக பொறுப்பேற்று கொண்ட பின்னர் இன்று பொதுமக்கள் முன் தோன்றி உரையாற்றினார். இதில், உலகம் முழுவதும் உள்ள அன்னையருக்கு அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். உக்ரைன் மற்றும் காசாவில் அமைதி ஏற்பட வேண்டும் என வேண்டுகோளாக கேட்டு கொண்டார். உடனடி போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும், பணய கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் மற்றும் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அப்போது அவர் வலியுறுத்தினார். போப் பிரான்சிஸ் கூறிய விசயங்களை எதிரொலிக்கும் வகையில் அவர் பேசும்போது, உலக நாடுகளின் மோதல்களை கடுமையாக சாடினார். 3-ம் உலக போருக்கு ஈடாக நாடுகள் மோதி கொள்ளும் சம்பவங்களை கடிந்து கொண்டார். இதேபோன்று, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு போப் லியோ வரவேற்பு தெரிவித்து உள்ளார். பேச்சுவார்த்தைகள் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என அவர் நம்பிக்கையையும் வெளியிட்டார். உலகில், அமைதிக்கான அற்புதம் ஏற்படுவதற்கு கடவுள் ஆசி வழங்கும்படி வேண்டி கொள்கிறேன் என்றும் அவர் கூறினார்.
