காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.
இந்த நிலையில், வடக்கு காசாவில் நேற்று இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் காசாவில் அகதிகள் முகாம், மருத்துவமனை உள்ளிட்ட இடங்கள் மீது இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 48 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில் பலி எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளதாக காசாவில் உள்ள மருத்துவமனைகள் தகவல் தெரிவிக்கின்றன. 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். ஹமாஸ் வசம் இருந்த பிணைக் கைதி ஈடன் அலெக்ஸாண்டர் விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் காசா மீதான தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது இஸ்ரேல். காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 52,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
























