நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 700 கோடி டாலர் கடன் வழங்க கடந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியத்துக்கும் (ஐ.எம்.எப்.), பாகிஸ்தானுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பாகிஸ்தானுக்கு முதல் தவணையாக 110 கோடி டாலர் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நிலையில், நேற்று சர்வதேச நாணய நிதியம் 2-வது தவணையாக 102 கோடி டாலர் (ரூ.8 ஆயிரத்து 670 கோடி) விடுவித்தது. இத்துடன், பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட கடன், 212 கோடி டாலராக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் தொடர்ச்சியான நிதியுதவி ராணுவ நோக்கங்களுக்காகவோ அல்லது அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதத்திற்காகவோ பயன்படுத்தப்படுவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தை இந்தியா எச்சரித்தது. மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிகளை பாகிஸ்தான் தொடர்ந்து நம்பி இருக்கிறது என்று இந்தியா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
