அயோத்தி, கருடன், நந்தன்’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை அடுத்து சசிகுமார் தற்போது நடித்துள்ள படம் ‘டூரிஸ்ட் பேமலி’. குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. அபிஷன் ஜீவிந்த் இயக்கிய இந்தப் படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த மே 1-ந் தேதி வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இலங்கை தமிழர்களான சசிகுமார் குடும்பம் அங்குள்ள பொருளாதார சூழல் காரணமாக தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். அதன்பிறகு அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையுடனும், எமோஷ்னலுடனும் படம் பதிவு செய்துள்ளது. இப்படம் தமிழ் நாட்டில் மட்டும் ரூ.20 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நடிகர் சசிகுமார் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தப்படம் நிறையப்பேரின் கனவை நனவாக்கியுள்ளது. நல்ல கதைகள் வைத்திருப்போருக்கு நம்பிக்கை தந்துள்ளது. ஒரே மாதிரி படம் பண்ண வேண்டாம். வித்தியாசமான படம் பண்ணலாம், என்கிற நம்பிக்கையை, இந்தப் படம் கொடுத்திருப்பதாக நினைக்கிறேன். பேமிலி ஆடியன்ஸ் திரையரங்குக்கு வந்துகொண்டு இருக்கிறார்கள். பல ஆண்டுகள் கழித்து எனக்கு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. இதை என் வெற்றியாக நான் நினைக்கவில்லை. புதிய தலைமுறை வெற்றி பெற்றுள்ளதாகப் பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
