தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜன நாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. ‘ஜன நாயகன்’ படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லனாக பாபி டியோல் நடிக்கிறார். இவர்களுடன் சேர்ந்து முக்கிய கதாப்பாத்திரங்களில் நரேன், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் விஜய் ‘தளபதி வெற்றி கொண்டான்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜன நாயகன் படத்தின் பதிவேற்றத்தை நடிகை பிரியாமணி பகிர்ந்துள்ளார். அதாவது, ” நான் விஜய் சாரின் தீவிர ரசிகை. அவருடன் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தில் இன்னும் எனது காட்சிகள் படமாக்கப்படவில்லை. விரைவில் எனது காட்சிகளும் படமாக்கப்படவுள்ளது. இந்த படத்தில் எனது கதாபாத்திரமும் மிகவும் முக்கியமான கதாபாத்திரம் தான்” என்று தெரிவித்துள்ளார்.
