காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி .இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.
பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 59 பேர் பணய கைதிகளாக உள்ளனர். இதில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக ஒழிக்கும் நோக்கிலும் காசா முனையில் இஸ்ரேல் தொடர்ந்து தரைவழி, வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. காசா முனையில் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனிடையே, காசா முனையில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றிவிட்டு அதை அமெரிக்க கட்டுப்பாட்டில் கொண்டுவர அதிபர் டிரம்ப் முன்மொழிந்தார். அவரது அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதேவேளை, டிரம்பின் முடிவுக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்தது. இந்நிலையில், காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களில் 10 லட்சம் பேரை லிபியாவில் நிரந்தரமாக குடியமர்த்த டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக லிபியா அரசுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாலஸ்தீனியர்களை லிபியா அரசு ஏற்றுக்கொண்டால் அந்நாட்டின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுளது.