சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க அதிபர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா? என்று அதிபர் திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் அவர் 14 கேள்விகளை முன்வைத்துள்ளார். இந்த நிலையில், மசோதா ஒப்புதலுக்கு காலநிர்ணயம் குறித்து உச்சநீதிமன்றத்திடம் அதிபர் திரவுபதி முர்மு கேள்வி எழுப்பிய விவகாரம் தொடர்பாக கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மேற்குவங்கம், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், காஷ்மீர், ஜார்கண்ட் உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அவர் எழுதி உள்ள கடிதத்தில், மாநில சுயாட்சியை காக்க அனைத்து மாநிலங்களும் உறுதிபூண வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்ட கட்டமைப்பு பாதுகாத்திட மாநில முதல்வர்கள் முன்வர வேண்டும். ஆளுநருக்கு எதிராக தமிழக அரசின் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கேள்விக்குள்ளாக்குவதே ஜனாதிபதி குறிப்பின் நோக்கம்.
ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை சீர்குலைக்க வெளிப்படையாக பா.ஜ.க. முயற்சிக்கிறது. நாட்டின் கூட்டாட்சி அமைப்பு, மாநில சுயாட்சியை பாதுகாக்க முன்வர வேண்டும். அதிபர் அனுப்பிய குறிப்பை அனைத்து மாநில அரசுகளும் எதிர்க்க வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை தாமதிக்க ஆளுநர் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த முடியாது.
மாநில அரசுக்கு எதிராக பிடிவாதப்போக்கை ஆளுநர்கள் கடைபிடித்தால் இந்த தீர்ப்பு உதவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.