சிரியாவில் அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கவிழ்ந்தது. அதிபராக இருந்த அல் அசாத் ரஷியாவுக்கு தப்பிச்சென்றார். இதையடுத்து, சிரியாவில் ஆட்சியை கைப்பற்றிய ஹயத் தஹிர் அல் ஷியாம் அதிபராக பதவியேற்றார். அதேவேளை, முன்னாள் அதிபர் அல் அசாத் ஆதரவாளர்கள் குழுக்களாக சேர்ந்து சிரியா அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அல்கொய்தா, ஐ.எஸ். போன்ற பயங்கரவாத குழுக்களும் சிரியாவில் செயல்பட்டு வருகின்றன. இந்த கிளர்ச்சிக்குழுக்கள், பயங்கரவாத குழுக்கள் மீது சிரியா அரசுப்படை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், சிரியாவின் அலெப்போ மாகாணம் ஹைடரியா மாவட்டத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக சிரியா பாதுகாப்புப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு நேற்று விரைந்து சென்ற அரசுப்படை தீவிர தேடுதல் வேட்டை நடத்தியது. அப்போது அங்கு பதுங்கி இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள், பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப்படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில் 3 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இந்த மோதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
