கொள்கையில் உறுதியாக நிற்பேன்.. நிதியைப் போராடிப் பெறுவேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம், டில்லியில் வரும் 24-ந்தேதி நடைபெற உள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை ஏற்கிறார். இந்த அழைப்பை ஏற்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டில்லி செல்கிறார். இதற்கிடையில் முதல்-அமைச்சரின் டில்லி பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். அதாவது “வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ?.. எல்லாம் “தம்பி” படுத்தும் பாடு என்று தெரிவித்தார். இந்த நிலையில், எந்நாளும் உரிமைக் கொடியைத்தான் ஏந்துவேன்… ஊர்ந்து போகமாட்டேன் என்று என்று எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ம் தேதி டெல்லி செல்கிறேன். சசிகலா முதல் அமித்ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் எடப்படி பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது? “பாஜகவுடன் கூட்டணி கிடையாது” என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் ‘புலிகேசி’யாக மாறி ‘வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற’ பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா?. இந்த ஸ்டாலினின் கை கருப்பு சிவப்புக் கழகக் கொடியை ஏந்தும் கை!. பேரறிஞரால் தூக்கிவிடப்பட்ட கை! கலைஞரின் கரம் பற்றி நடந்த கை! எந்நாளும் உரிமைக்கொடியைத்தான் ஏந்துவேன்! ஊர்ந்து போகமாட்டேன்! இன்றைக்குக் கூட, தமிழ்நாட்டின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன். கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன்! தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.