மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியான வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10வீட்டுத்திட்டத்தின் அங்குரார்ப்பண நடவடிக்கைகள் கடந்த 20ம் திகதி செவ்வாய்க்கிழமையன்று முன்னெடுக்கப்பட்டன.
கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் இலங்கை முன்னாள் வர்த்தக சங்கம் ஏற்பாட்டில் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகிழவெட்டவான் மற்றும் செங்கலடியில் அமைக்கப்படவுள்ள 10 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டம் நிகழ்வில் ஊர் மக்கள் மற்றும் சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
கனடாவில் இயங்கிய வண்ணம் தாயகத்தில் நற்பணிகள் பல புரிந்து வரும் ‘கனடா உதவும் பொற்கரங்கள்’ அமைப்பின் தலைவர் விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை தலைமையில்
நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழு பேச்சாளரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் வட அமெரிக்கா தமிழ் சங்கத்தின் உறுப்பினர் சிவம் வேலுப்பிள்ளை,
கனடா விபுலானந்தர் கலைமன்றத்தின் தலைவர் . கந்தையா புருஷோத்தமன்,
சமூக செயற்பாட்டாளர் வி.விஜயராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மிகவும் வறிய நிலையில் தகர கொட்டில்களில் வாழும் குடும்பங்கள் இனங்காணப்பட்டு
அவர்களுக்கான வீடுகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை முன்னாள் வர்த்தக சங்கம் கனடா அமைப்பானது கடந்த 12வருடமாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு சமூக நல திட்டங்களை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த மனித நேயப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் இலங்கை முன்னாள் வர்த்தக சங்கம் கனடா அமைப்பின் உறுப்பினர்களான கனடா உதயன் நண்பர்கள் மற்றும் ‘கனடா உதவும் பொற்கரங்கள்’ அமைப்பின் தலைவர் விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்களுக்கும் கனடா உதயன் ஆசிரிய பீடம் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றது
இங்கே காணப்படும் அங்கு எடுக்கப்பெற்றவையாகும்