அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் தாமோதரன் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், ஜூலை 30-ம் தேதிக்குள் கோவையில் வெடிகுண்டு வைத்து எஸ்.பி.வேலுமணியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், கறுப்பு பணம் வைத்துள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், மே 25ஆம் தேதி ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என்றும், காவல்துறைக்கு சென்றால் 3 மாதங்களில் குடும்பத்தில் 3 பேரை கொல்வோம் எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், எஸ்.பி.வேலுமணிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட கோவை மாநகர காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்.பி.வேலுமணிக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.