சீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் பல்வேறு சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று பெங்யாங் கோபுரம் ஆகும். 650 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோபுரத்தைக் காண தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஏராளமானோர் அங்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் திடீரென அதன் மேற்கூரை சரிய தொடங்கியது. இதனை பார்த்த பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். சற்றுநேரத்தில் அந்த கோபுரத்தின் மேற்கூரை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. அதிர்ஷ்டவசமாக சுற்றுலா பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த பெங்யாங் கோபுரம் கடந்த 1995-ம் ஆண்டு புனரமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது மேற்கூரை இடிந்து விழுந்ததால் உள்ளூர் நிர்வாகம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது.
