காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்த ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற முன்னணி அமைப்புக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்தது. இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம் பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து, தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானில் செயல்பட்ட 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது இந்தியாவின் நோக்கமல்ல என கூறிய மத்திய அரசு பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்தது. இதனை தொடர்ந்து, பல்வேறு கட்சிகளை சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்பி, ஆபரேஷன் சிந்தூர் மற்றும் இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க முடிவு செய்தது.
இதன்படி, அனைத்துக்கட்சி பிரதிநிதிகளை கொண்ட பல்வேறு குழுக்கள் உலக நாடுகளுக்கு பயணம் செய்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன்படி காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு ஒன்று கயானா, பனாமா, கொலம்பியா, பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய 5 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது. சசி தரூர் தலைமையிலான இந்த குழுவில் சாம்பவி (லோக் ஜனசக்தி – ராம்விலாஸ்), சர்பராஸ் அகமது (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா), ஹரிஷ் பாலயோகி (தெலுங்குதேசம்), ஷசாங் மணி திரிபாதி (பா.ஜனதா), புவனேஸ்வர் காலிதா (பா.ஜனதா), மிலித் தியோரா (சிவசேனா), தேஜஸ்வி சூர்யா (பா.ஜனதா) மற்றும் முன்னாள் வெளிநாட்டு தூதர் தரண்ஜித் சாந்து ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சசி தரூர் எம்.பி., அளித்த பேட்டியில், இந்தியர்கள் உள்பட பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, நாங்கள் இணைந்து வந்துள்ளோம். உலகளவில் தாக்கம் ஏற்படுத்தியுள்ள, நாம் ஒன்றாக போராட வேண்டிய விசயம் இதுவாகும். 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் ஐ.நா. கமிட்டிக்கு சென்று இந்தியா தகவல்களை அளித்தது. 2025-ம் ஆண்டில் அது தாக்குதலை நடத்தியுள்ளது. பாகிஸ்தான் வழக்கம்போல் அதனை மறுத்து வருகிறது என கூறியுள்ளார். தொடர்ந்து அவர், நான் அரசுக்காக வேலை செய்யவில்லை. நான் எதிர்க்கட்சிக்காக வேலை செய்பவன். இது பதிலடி தருவதற்கான சரியான நேரம். அதனை இந்தியா சரியாக செய்தது. துல்லியத்துடன் நடந்த பதிலடியானது, 9 பயங்கரவாத இலக்குகளை, அதன் தலைமையகங்களை மற்றும் ஏவுதளங்களை குறி வைத்தது என்றும் அவர் கூறியுள்ளார்.