காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானதற்கு பதிலடியாக, இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தி அவை அழிக்கப்பட்டன. காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு ஒன்று கயானா, பனாமா, கொலம்பியா, பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய 5 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது. இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சசி தரூர் எம்.பி., நேற்று காலை அளித்த பேட்டியில், பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக எந்தவித குற்ற விசாரணையோ, தீர்ப்போ இல்லை. பயங்கரவாத உட்கட்டமைப்புகளை அழிக்கும் எந்த முயற்சியும் பாகிஸ்தான் அரசால் மேற்கொள்ளப்படவில்லை. இதனை தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான அனைத்து கட்சி குழுவினர், கயானா நாட்டிற்கு சென்று சேர்ந்தனர். அவர்களை இந்திய வம்சாவளியினர் சிறப்பாக வரவேற்றனர். இதுபற்றி செய்தியாளர்களிடம் அவர்கள் பேசும்போது, இந்த பயங்கரவாதத்திற்கு கயானாவில் உள்ள நாங்கள் அனைவரும் கண்டனம் தெரிவிக்கிறோம். இந்திய குடிமக்களுக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம். அவர்களுக்கு எங்களுடைய இரங்கல்கள். பாகிஸ்தானின் இந்த பயங்கரவாத செயலுக்கு எதிரான பிரதமர் மோடியின் இந்த கடுமையான அணுகுமுறைக்கும் அவருடைய ஒவ்வொரு நடவடிக்கைக்கும் நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் என்றனர். இந்நிலையில் கயானாவில், அந்நாட்டின் துணை ஜனாதிபதி பாரத் ஜக்தியோவை, சசி தரூர் தலைமையிலான அனைத்து கட்சி குழுவினர் நேரில் சந்தித்து பேசினர். இதன்பின்னர் ஜார்ஜ் டவுனில் செய்தியாளர்களிடம் காலை பேசிய சசி தரூர், இது ஓர் உன்னத சந்திப்பு. துணை அதிபர் ஜக்தியோ நம்முடைய நாட்டின் நண்பர். அண்டை நாட்டுடனான (பாகிஸ்தான்) சமீபத்திய நிகழ்வுகளில் நம்முடைய நிலையை பற்றி பெரிய அளவில் அவருக்கு புரிதல் உள்ளது. கயானாவின் வளர்ச்சி பற்றியும் விரிவான அளவில் நாங்கள் உரையாடினோம்.
அதில், இந்தியாவின் பங்கு இருப்பதற்கான சூழல் பற்றியும் பேசினோம் என்றார். தொடர்ந்து அவர், கயானாவில் மிக பெரிய அளவில் விரிவாக்க பணிகள் நடந்துள்ளன. எண்ணெய் மற்றும் எரிவாயு கண்டறியப்பட்டு உள்ளது. அவற்றை கொண்டு உட்கட்டமைப்பு மாற்றங்களை செய்திருக்கின்றனர். அதுதவிர இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை பற்றியும் விரிவான அளவில் நாங்கள் பேசினோம் என்று அவர் கூறியுள்ளார்.