உக்ரைனுக்கு எதிரான போரில் 3 ஆண்டுகளாக ரஷியா ஈடுபட்டு வருகிறது. போரால் பெண்கள், வீரர்கள் என லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், அதில் முடிவு எதுவும் எட்டப்படாத நிலை காணப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் குர்ஸ்க் ஓபிளாஸ்ட் என்ற பகுதிக்கு ஹெலிகாப்டரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, உக்ரைனின் ஆளில்லா விமானம் ஒன்று புதினின் ஹெலிகாப்டரை தாக்கியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ரஷியாவில் இருந்து வெளிவரும் ஆர்.பி.சி. என்ற செய்தி நிறுவனம் இதனை தெரிவித்து உள்ளது. இந்த சூழலில், ரஷிய வான் பாதுகாப்பு மண்டல தளபதியான யூரி டாஷ்கின் கூறும்போது, புதினின் வான்வெளி பயணம் சீராக இருக்கும் வகையில், அதனை பாதுகாத்ததுடன், டிரோன் தாக்குதலுக்கு எதிராக ரஷிய படைகள் செயல்பட்டன என கூறினார். நாங்கள் உடனடியாக வான் பாதுகாப்புக்கான போரில் ஈடுபட்டோம். தொடர்ந்து போரிட்டு அதனை முறியடித்து வெற்றி பெற்றோம். புதினின் பயணத்திற்கான வான்வெளி பாதுகாப்பையும் உறுதி செய்தோம் என்றார். டிரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்த ஹெலிகாப்டர் திறம்பட செயல்பட்டது என்றார். கடந்த மார்ச்சுக்கு பின்னர் அந்த பகுதிக்கு புதின் செல்லாத நிலையில், அவருடைய இந்த பயணம் முதன்முறையாக சமீபத்தில் அமைந்தது. அப்போது, உக்ரைனின் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது. எனினும், இந்த தாக்குதல் பற்றி உக்ரைன் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. கடந்த ஜனவரியில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பைடன் தலைமையிலான அரசு, புதினை கொலை செய்ய முயற்சித்தது என்ற தகவல் வெளியானது. இதனை அப்போது பாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்தின் தொகுப்பாளராக இருந்த டக்கர் கார்ல்சன் கூறினார். ஆனால், அதற்கான சான்று எதனையும் அவர் வெளியிடவில்லை. எனினும், ரஷியாவின் அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இதுபற்றி கூறும்போது, புதின் சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்டார் என கூறினார். இந்த சூழலில், புதினை கொலை செய்வதற்கான உக்ரைனின் டிரோன் தாக்குதல் முயற்சி பற்றிய செய்தி வெளிவந்துள்ளது.
