தமிழகத்தில், நாடாளுமன்ற மாநிலங்களவைக்கான 6 எம்.பி.க்களின் பதவி காலம் வருகிற ஜூலை 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து காலியாகவுள்ள 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 19-ல் நடைபெறும். இதன்படி, அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 9-ந்தேதி தொடங்கும். வேட்பு மனு பரிசீலனை ஜூன் 10-ந்தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு ஜூன் 12-ந்தேதி கடைசி நாளாகும். தேர்தல் ஜூன் 19-ந்தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அன்றைய தினமே மாலை 5 மணியளவில் நடைபெறும். 6 எம்.பி.க்களில் தி.மு.க.வை சேர்ந்த எம். சண்முகம், எம். முகமது அப்துல்லா, பி. வில்சன், ம.தி.மு.க. தலைவர் வைகோ, பா.ம.க.வை சேர்ந்த அன்புமணி ராமதாஸ், மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த என். சந்திரசேகரன் ஆகியோர் அடங்குவர். எம்.எல்.ஏ.க்கள் அடிப்படையில் தி.மு.க.வுக்கு 4 இடங்களும், அ.தி.மு.க.வுக்கு 2 இடங்களும் உள்ளன. இதில், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அல்லது ம.தி.மு.க. தலைவர் வைகோ இருவரில் யாருக்கு ஒரு சீட் போகும் என்பது முடிவு செய்யப்படாமல் உள்ளது. இதேபோன்று காங்கிரஸ் கட்சியும் ஒரு சீட்டை பெறும் முயற்சியில் உள்ளது. இதற்காக, ஈரோடு இடைத்தேர்தலின்போது டீல் பேசப்பட்டது என கூறப்படுகிறது. இதேபோன்று, அ.தி.மு.க.வில் தே.மு.தி.க.வுக்கு ஒரு சீட் வழங்கப்படும் என முன்பே கூறப்பட்டது என பிரேமலதா கூறியுள்ளார். மற்றொரு சீட், கூட்டணியில் உள்ள பா.ஜ.க. மற்றும் ஓ. பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடனேயே இறுதி செய்யப்பட முடியும். இதனால், பா.ஜ.க.வுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது என பார்க்கப்படுகிறது. எனினும், தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளில் இருந்து யார் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
