எட்டி விடும் தொலைவில் இருக்கும் வெற்றிக்கோட்டைத் தொட்டுவிடுங்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
தமிழக அரசு போட்டித்தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்காக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இலவச உண்டு, உறைவிட பயிற்சி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற நிறைய மாணவ, மாணவிகள் யூ.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்று பல்வேறு மத்திய அரசு பணிகளில் உள்ளனர். இந்நிலையில், நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்று 2024ம் ஆண்டு இந்திய வனப்பணியிடத்திற்கு தேர்வாகியுள்ளவர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து பாராட்டினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று 2024-ஆம் ஆண்டு வனப்பணி பணியிடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைச் சந்தித்துப் பாராட்டினேன். யுபிஎஸ்சி குடிமைப் பணித் தேர்வுக்குத் தமிழ்நாட்டில் இருந்து தயாராகும் மாணவர்களுக்கு மிகப் பெரும் ஊக்கமாக நான் முதல்வன் அமைந்துள்ளதை அவர்களுடனான கலந்துரையாடலில் உணர முடிந்தது. கடந்த முறை தேர்ச்சி பெற இயலாதவர்கள் சோர்ந்து போகாதீர்கள், இந்த ஆண்டு இன்னும் சிறப்பாகத் தயாராகி, எட்டி விடும் தொலைவில் இருக்கும் வெற்றிக்கோட்டைத் தொட்டுவிடுங்கள்’ என தெரிவித்துள்ளார்.