விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கொண்டு “சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்” உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவர் தற்போது லியோ ஜான் பால் இயக்கத்தில் ‘மார்கன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தினை தொடர்ந்து ‘வள்ளி மயில், சக்தித் திருமகன், அக்னிச் சிறகுகள், லாயர்’ உள்ளிட்ட படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் படத்தின் முதல்காட்சி பதாகை வெளியானது. இந்த படத்திற்கு தெலுங்கில் ‘பராசக்தி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டிருந்து. அதே நாளில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் முதல்காட்சி வெளியானது. சிவகார்த்திகேயனின் படத்திற்கும் ‘பராசக்தி’ என்ற தலைப்பே வைக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு படங்களுக்கும் ஒரே தலைப்பு வைக்கப்பட்டிருப்பது, தொடர்பாக இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தலைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சமூகமாக முடிவடைந்தது. அதாவது, நடிகர் விஜய் ஆண்டனி ‘பராசக்தி’ பட தலைப்பு சிவகார்த்திகேயனுக்கு விட்டுக்கொடுத்து விட்டார். இந்த நிலையில், மார்கன் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் இது குறித்து விஜய் ஆண்டனியிடம் கேள்ளி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் ஆண்டனி, “நான் பராசக்தி படத்தின் தலைப்பை பதிவு செய்து வைத்திருந்தேன் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. திரைத்துறையில் தலைப்பை பதிவு செய்ய இரண்டு, மூன்று யூனியன்கள் இருக்கிறது. இந்த விஷயம் எதார்த்தமாக நடந்தது. நான் பதிவு செய்திருப்பது தெரியாமல் அவர் தலைப்பை அறிவித்துவிட்டனர். அந்த தலைப்பு ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்டது. அதுமட்டுமின்றி தயாரிப்பாளரின் வலியும், வேதனையும் எனக்கு புரியும். அதனால்தான் அவர்களுக்காக அந்த தலைப்பை விட்டுக் கொடுத்து விட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
