கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுணால் திறந்து வைக்கப்பட்ட ”தமிழினப் படுகொலை நினைவுத்தூபி” போன்று ஏனைய புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் ”தமிழினப் படுகொலை நினைவுத்தூபிகள்” அமைக்கப்படலாம் என்ற அச்சம் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்,நாட்டில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளதாக கூறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்று மிரட்டுகின்றார்”
கே.பாலா
இலங்கையில் தமிழர் தாயகப்பகுதியில் இலங்கை அரசினாலும் அதன் இராணுவத்தினாலும் நடத்தப்பட்டது அப்பட்டமான இனப்படுகொலை என்பதை வடக்கு, கிழக்கு மக்கள் உரத்து கூறிவரும் நிலையில் அந்தக்குரலுக்கு ஆதரவான குரல்கள் உலக நாடுகளில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இவ்வாறான உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இலங்கையில் தமிழ்த்தேசிய இனம் மீது, இலங்கை அரசால் வலிந்து மேற்கொள்ளப்பட்ட மனிதப் பேரவலத்தை ‘இனப்படுகொலை’ என்று ஏற்றுக்கொண்ட முதலாவது நாடாக கனடா போற்றப்படுகின்றது.
இலங்கையில் வந்தேறுகுடிகளான சிங்களவர்களுக்கும் பூர்வீக குடிகளான தமிழர்களுக்கும் 3 தசாப்தங்களுக்கும் மேலாக இடம்பெற்ற ஒரு போரின் முடிவு இலங்கையின் வடக்கு கிழக்கில் ”இனப்படுகொலை” யாக நினைவுகொள்ளப்படுகின்ற நிலையில், தென்னிலங்கையில் ”இனப்படுகொலை”என்பதனை நிராகரித்து ”போர் வெற்றிக் கொண்டாட்டம்” என்ற பெயரில் வெற்றிநாளாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில்தான் இலங்கையின் தமிழர் தாயகப்பகுதியில் இலங்கை அரசினாலும் இராணுவத்தினாலும் நடத்தப்பட்டது ”தமிழ் இனப்படுகொலை” என்பதனை கனடா ஏனைய உலக நாடுகளுக்கு உரத்துக் கூறியுள்ளது.
இலங்கை அரசினதும் இராணுவத்தினதும் இறுதிக்கட்ட யுத்த தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, ”தமிழின அழிப்பு நினைவகம்” என்ற பெயரில் கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் கடந்த 11 ஆம் திகதி பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுணால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதுடன் மே மாதம் 18ஆம் திகதியை தமிழின அழிப்பை நினைவு கூரும் நாளாக கனேடிய அரசாங்கம் அறிவித்தும் ”தமிழினப் படுகொலை”நடந்தது என்பதனை சர்வதேச மயப்படுத்தியுள்ளது.
கனடாவின் இந்த துணிச்சலான,மனித உரிமைகளுக்கு மதிப்புக்கொடுக்கின்ற, சிறுபான்மையினங்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கின்ற,அநீதிகளை சமரசமின்றி எதிர்க்கின்ற,நியாயத்தின் பக்கம் நிற்கின்ற ,உண்மையை உரத்துக்கூறுகின்ற உயரிய அரசியலும் உயர்ந்த குணமும்தான் இன்று இலங்கை அரசுக்கும் சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகளுக்கும் சிம்ம சொப்பனமாக மாறியுள்ளதுடன் இவர்களை நெருப்பில் விழுந்த புழுக்களாக துடிக்கவும் துள்ளவும் வைத்துள்ளது.
தமிழின படுகொலையை நினைவுகூரும் வகையில் கனடா, பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் கடந்த 11ஆம் திகதி தமிழின அழிப்பு நினைவுத்தூபி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டதற்கு இலங்கை அரசாங்கம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.இது தொடர்பில் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கடந்த 14 ஆம் திகதி இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஸை அழைத்து,இலங்கை அரசாங்கம் இனப்படுகொலை குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரிப்பதாகவும், கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னத்தை கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில் எந்தவொரு நம்பகமான அதிகாரியாலும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை.அவை தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகள் என இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்துகிறது. இந்தப் பொய்யான கதையை இலங்கை முற்றிலும் நிராகரிப்பதுடன், கனடாவிற்குள் தத்தமது தேர்தல் ஆதாயங்களுக்காக இவ்வாறு பிரசாரம் செய்யப்பட்டுள்ளதாக நம்புகிறது.
2021, ஏப்ரலில், கனடாவின் வெளிநாட்டு அலுவல்கள், வர்த்தகம் மற்றும் அபிவிருத்தித் திணைக்களம், இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக எந்தவொரு கண்டுபிடிப்பையும் கனடா அரசு மேற்கொள்ளவில்லை என்பதை அதிகார பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.மேலும் , 2006 இல் கனடாவானது தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பொன்றாக அறிவித்ததுடன், 2024 ஜூனில் இவ்வகைப்படுத்தலை மீண்டும் உறுதிப்படுத்தியது.
கனடாவின் பிரம்டன் நகரில் உள்ள சிங்காவுசி பூங்காவில், தமிழ் இனப்படுகொலையைக் குறிக்குமுகமாக நினைவுச்சின்னமொன்றை நிர்மாணிப்பது குறித்து, இலங்கை அரசு பலமுறை தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.பிரம்டன் நகர சபையின் இவ்வருந்தத்தக்க முயற்சியைத் தலையிட்டுத் தடுக்குமாறு, கனடாவின் மத்திய அரசை இலங்கை அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இச்செயற்பாடு குறித்த முன்னெடுப்புக்களை, பரந்தளவிலான இலங்கை மற்றும் கனேடிய சமூகங்களுக்கு எதிரானதான ஒன்றாகவே இலங்கை அரசு கருதுகிறது.
இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவதும், கட்டுக்கதைகளை அடிப்படையாகக் கொண்ட நினைவுச்சின்னங்களை நிர்மாணிப்பதும் பொதுமக்களை தவறாக வழிநடத்துவது மட்டுமல்லாமல், அனைத்து சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை மற்றும் நீடித்த அமைதிக்கான இலங்கையின் அயராத முயற்சிகளைச் சீர்குலைப்பவையாக அமையுமென, இலங்கை அரசு உறுதியாக நம்புகின்றது எனவும் கனடிய தூதுவரிடம் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கடும் தொனியில் கண்டனம் தெரிவித்தார்.
அதேவேளை இலங்கையிலுள்ள பிரதான தமிழ் தேசியக் கட்சிகள்,அமைப்புக்கள்,புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர் அமைப்புக்கள் கனடா அரசுக்கும் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுணுக்கும் கனேடிய தூதுவருக்கும் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தன. இலங்கைத் தமிழர்களின் பிரதான கட்சியான இ லங்கைத் தமிழரசுக்கட்சி கனேடிய தூதுவர் எரிக் வோல்ஸை நேரில் சந்தித்து நன்றிகளை தெரிவித்தது.
கனடாவின் பிரம்டன் நகரில் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை காலப்பெறுமதி மிக்க செயல் என்று கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஸை சந்தித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்ததுடன் தமிழர்கள் சார்பில் கனேடிய அரசுக்கு நன்றி தெரிவித்து கடிதமொன்றையும் கையளித்துள்ளார். மேற்குறித்த நினைவுத் தூபி அமைப்புக்கு நன்றி தெரிவித்து கனேடியப் பிரதமர் மார்க் ஹானிக்கும், பிரம்டன் நகர மேயர் பற்றிக் பிரவுணுக்கும் கடந்த 19ஆம் திகதி மின்னஞ்சலில் அனுப்பிவைக்கப்பட்ட கடிதங்களின் பிரதியே கனேடிய ஸ்தானிகரிடம் நேரில் கையளிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில்தான் கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் கடந்த 11 ஆம் திகதி பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுணால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட ”தமிழின படுகொலை நினைவுத்தூபி”போன்று ஏனைய புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் ”தமிழினப்படுகொலை நினைவுத்தூபிகள்” அமைக்கப்படலாம் என்ற அச்சம் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்தான் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்,நாட்டில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளதாக கூறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டி மூலம் அச்சுறுத்தியுள்ளார்.
பிரம்டன் நகரில் தமிழின அழிப்பு நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்ட போது பிரம்டன் நகர மேயர், ஏனைய நகர மேயர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.2021 ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கம் , வெளிவிவகார அமைச்சு மற்றும் கனடாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் கொன்சியுலர் காரியாலயம் இந்த நினைவுத்தூபிக்கு எதிர்ப்பை தெரிவித்து இராஜதந்திர மட்டத்தில் தலையீடு செய்துள்ளது. இது கனடாவின் மத்திய அரசுடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இன அழிப்பு இடம்பெற்றதாக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் உறுதிப்படுத்தப்படவில்லை. கனடாவினால் அமுல்படுத்தப்பட்ட இனவழிப்பு வாரத்தை ஏற்க முடியாது என்பதை வெளிவிவகாரத்துறை அமைச்சு கொழும்பில் உள்ள கனடா உயர்ஸ்தானிகராலயத்துக்கு அறிவித்துள்ளது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவும் இலங்கையின் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஆனால் இந்த சலசலப்புகளுக்கெல்லாம் கனடா அசரவில்லை. பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண் இது தொடர்பில் கூறுகையில் .நாங்கள் தமிழர்கள் இனவழிப்பின் அளவை மறக்கக் கூடாது.இது ஒரு உடல்ரீதியான இனப்படுகொலை மாத்திரமல்ல உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் மீதான தாக்குதல் மேலும், தமிழர் படுகொலை நினைவுத்தூபி என் நகரத்தில் உருவாகியுள்ளமை குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன் ஆனால் இன்னமும் செய்யவேண்டிய பணிகள் உள்ளன. எனவே இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு பிரம்டனில் இடமில்லை. கனடாவில் இடமில்லை கொழும்பிற்கு திரும்பிச் செல்லுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.இந்த அறிவிப்பினால்தான் கனடாவிலுள்ள சிங்களவர்கள் இந்த நினைவுத்தூபி தொடர்பில் சிங்கக்கொடியை தூக்கிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்யமுடியாத நிலையில் உள்ளனர்.
அதுமட்டுமல்ல இலங்கை அரசுக்கு அடுத்த அடியாக கனடாவின் ரொரென்ரோவின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் ஸ்காபொரோவில் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கவுன்சிலர் பார்த்தி கந்தவேள் முன்மொழிந்த தீர்மானமே ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பிரம்டனில் அமைக்கப்பட்ட தமிழின இன அழிப்பு நினைவுத்தூபிக்கு எதிராக அநுர அரசு மற்றும் ராஜபக்ஸக்கள் சிங்கள இனவாதிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில்தான் கனடாவின் அடுத்த நினைவுத்தூபி அறிவிப்பு இலங்கை அரசுக்கும் சிங்களபேரினவாதிகளுக்கும் கடும் சினத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.