கனடிய மத்திய அமைச்சரவையில் முக்கிய அமைச்சர்களில் ஒருவராக பதவியேற்ற கௌரவ ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற வைபவத்தில் கலந்து கொண்ட அவரது ஆதரவாளர்களும் நண்பர்களும் கடந்த 23-05-2025 வெள்ளிக்கிழமையன்று ஒரு உணர்பூர்வமான அனுபவத்தை தமதாக்கிக்கொண்டார்கள் என்றால் அது மிகையாகாது.
கடந்த லிபரல் அரசின் ஆட்சிக் காலத்திலும் முன்னாள் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அவர்களின் தலைமையில் முக்கிய அமைச்சராகப் பதவியேற்ற பணியாற்றிய அவர் புதிய அரசாங்கத்தின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்ற வைபவத்தை பல காட்சி ஊடகங்கள் மூலமாக எமது மக்கள் கண்டு களித்தார்கள்.
இந்த வகையில் ஏற்கெனவே கனடாவின் ஆளுனர் நாயகம் மற்றும் பிரதம மந்திரி மார்க் கார்னி ஆகியோர் முன்னிலையில் கனடாவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்ற கௌரவ ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை 23ம் திகதி ஸ்காபுறோ-கில்வூட்-ரூஜ்பார்க்- (Scarborough=Guildwood-Rouge Park)தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக கனடிய தலைநகரான ஒட்டாவாவில் உள் பாராளுமன்ற வளாகத்தின் விசேட மண்டபம் ஒன்றில் உயர் அதிகாரி ஒருவரின் முன்பாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
மேற்படி அரச வைபவத்தில் அழைக்கப்பெற்ற விருந்தினர்களாகக் கலந்து கொண்டவர்கள் அனைவருமே தேர்தல் பிரச்சாரக் காலத்தில் கௌரவ ஹரி ஆனந்தசங்கரி அவர்களின் வெற்றிக்காக உழைத்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அன்றைய நிகழ்வானது கலந்து கொண்ட அனைவருக்கும் புதிய உணர்வுகளை தட்டி எழுப்பியதாக அமைந்தது. அங்கு பாராளுமன்றத்தின் ஆசனங்களில் தனது ஆதரவாளர்களையும் நண்பர்களையும் அமரவைத்து அழகு பார்த்த அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் தானும் மகிழ்ச்சியுடன் அனைவரையும் வரவேற்றார்.