சிறையில் கைதி ஒருவர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் (STF) எவ்வாறு கொடூரமாகத் தாக்கப்பட்டார் என்பதை, கைதிகளின் உரிமைகளுக்காக வாதிடும் நாட்டின் முன்னணி அமைப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
இணைய வசதியைப் பயன்படுத்தி பூசா சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஒரு கைதியை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நிர்வாணமாக்கி, தாக்கியதாக, சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு கொழும்பில் ஒரு ஊடக சந்திப்பை நடத்தி வெளிப்படுத்தியுள்ளது.
“மே 23, 2025 அன்று, பூசா சிறைச்சாலையில் ஒரு கைதி கொடூரமாகத் தாக்கப்படுகிறார். இந்தக் கைதி ரவிது சங்க சில்வா எனவும் அறியப்படுகின்றது.”
நீதிமன்றத்திற்குச் செல்லாமல் இணையத்தின் ஊடாக நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பதை சட்டப்பூர்வமாக்கும் சட்ட மூலத்தை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த நாளில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
சிறைச்சாலையில் உள்ள ஒரு கைதியை அதே வளாகத்தில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லும்போது, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், அவரைச் சோதனை செய்ய வேண்டியதன் அவசியம் என்னவென? கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் தலைவர் சுதேஷ் நந்திமால் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஆகவே, இந்தக் கைதியை, அதற்காக, பூசா சிறைச்சாலை அலுவலகத்திற்குதான் அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. பூசா சிறைச்சாலையில் இருந்து அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லும்போது, இந்த STF அவரை சோதனை செய்துள்ளனர். எனவே, சிறைச்சாலைக்குள் இருக்கும் கைதியை சிறைச்சாலை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லும்போது ஏன் சோதனை செய்கிறார்கள் என்பதுதான் எங்களுக்கு உள்ள கேள்வி?”
கைதி ஏற்கனவே ஸ்கேனரைப் பயன்படுத்தி ஸ்கேன் செய்யப்பட்டிருந்தாலும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதியின் ஆடைகளை கழற்றி சோதனை செய்ததாக கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு கூறுகிறது.
“ஏனென்றால் சிறைச்சாலைக்கு சரியான பாதுகாப்பை STF வழங்கவில்லை. அவ்வாறு சோதனைச் செய்ய வேண்டுமெனின், சிறையில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் அல்லது ஆயுதங்கள் இருக்க வேண்டும். மேலும், இந்த நபரை ஸ்கேனர் இயந்திரத்தில் சோதனை செய்விட்டுதான் சோதனை செய்கிறார்கள். பின்னர் அவரை முழுமையாக நிர்வாணமாக்கி சோதனை செய்கிறார்கள்.”
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், தடுப்புக் கைதியான ரவிது சங்க சில்வாவின் தலையை குறிவைத்து தாக்கியதாகக் கூறும் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு, சிறைச்சாலை அதிகாரிகள் இருக்கின்றபோது, எந்த அதிகாரத்தின் கீழ் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதிகளின் ஆடைகள், அணிகலன் சோதித்தனர் என கடுமையாகக் கேள்வி எழுப்பியது.
“அவர் ஒரு சந்தேக நபர், அவர் ஒரு விசாரணைக் கைதி. இந்தத் தாக்குதலுக்குக் காரணம் அவர் தலையில் அணிந்திருந்த ஒரு பட்டி. இந்த பட்டியை பார்த்த STF அதிகாரி, அது உங்களுக்கு உரிமையா என்று கேட்டுள்ளாராம். கேட்கின்ற கதையை பாருங்கள். இது STF-உடன் தொடர்புடையதா? கைதி அணிந்திருப்பது STF-உடன் தொடர்புடையதா? அதை ஆராய்ந்து பார்க்க சிறைச்சாலை இருக்கிறது. ஆனால் அவரை நிர்வாணமாக்கி, பரிசோதித்து, எரிச்சலடைய செய், தாக்கியும் உள்ளனர். இந்த கைதி மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டுள்ளார். இந்த பட்டியை அடிப்படையாகக் கொண்டுதான் அவர் தாக்கப்படுகிறார்.”
பூசா சிறையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் தாக்கப்பட்ட இந்த இளைஞனின் உயிரை சிறை அதிகாரிகள் காப்பாற்றியதாக சுதேஷ் நந்திமால் சில்வா குறிப்பிடுகின்றார்.
“இந்தக் கைதியை சிறை அதிகாரி காப்பாற்றப்படுகிறார். இல்லையெனில், அவர் இந்த STF-இனால் அடித்துக் கொல்லப்பட்டிருப்பார். அவர், இணையத்தின் ஊடாக நீதித்துறை நடவடிக்கைகளுக்கு முன்னிலையாகும்போது, இது குறித்து நீதிபதியிடம் முறைப்பாடு அளித்தமையால் தான், இன்று, இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தவும், இந்த கைதியை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லவும் நீதிபதி உத்தரவிடுகிறார்.”
இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி, கைதியைத் தாக்கிய பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை தண்டிக்குமாறு கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பூசா சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தொடர்ந்து கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்துவதாக இந்த குழு கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் குற்றம் சாட்டியுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது