நகைக் கடன்களுக்கான விதிகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
நகைக் கடன்களுக்கான விதிகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரை செய்ததை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; “மத்திய நிதியமைச்சருக்கு நான் எழுதிய கடிதம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது. சிறு கடன் வாங்குபவர்களின் நலன்களைப் பாதுகாத்தல், குறிப்பாக விவசாயிகள் மற்றும் தினசரி வருமானம் ஈட்டுபவர்கள் ரூ. 2 லட்சத்திற்கும் குறைவான கடன்களை நாடுபவர்களின் நலன்களைப் பாதுகாத்தல் மற்றும் சரியான நேரத்தில் கடன் கிடைப்பதை உறுதி செய்தல் ஆகியவை எனது நிலையான கோரிக்கையாக இருந்து வருகின்றன. ஏழைகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த கொள்கையாக இருந்தாலும் மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்க வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.