பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட 23 பேரில் 22 பேர் வருகை தந்துள்ளனர்.
பாமகவில் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே நீடித்து வந்த பனிப்போர் பகிரங்கமாக வெடித்தது. அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தவறு என்றும் பொதுக்குழுவை கூட்டி அவரை நீக்குவேன் என்பன உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைத்தார். தைலாபுரத்தில் நா தழுதழுக்க ராமதாஸ் அளித்த பேட்டி பாமகவினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந் நிலையில், உட்கட்சி மோதலில் அடுத்து என்ன நடக்கும் என்று கேள்விகள் எழுந்திருக்கும் சூழலில், கட்சியின் மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்களை உள்ளிட்டோரை இன்று சந்தித்து அன்புமணி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள மகாராஜா திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு இன்று முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின்போது, பா.ம.க.வின் அனைத்து நிலை பொறுப்பாளர்களையும் சந்திக்க அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட 23 மாவட்டச் செயலாளர்களில் 22 மாவட்டச் செயலாளர்கள் வருகை தந்துள்ளனர். அன்புமணி வருகை தந்த போது பாமக தலைவர் என கோஷம் எழுப்பினர்.பின்னர் கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் கூறியதாவது: கட்சியில் என்றும் அடிமட்ட தொண்டராக இருக்கவே விரும்புகிறேன். பொதுக்குழுவில் நீங்கள்தான் என்னை தலைவராக தேர்வு செய்தீர்கள். தொண்டர்கள் இல்லையென்றால் பாட்டாளி மக்கள் கட்சி கிடையாது. நமக்குள் வேற்றுமைக்ள் இருக்க கூடாது: ராமதாசின் கொள்கைகளை செயல்படுத்துவதற்கு வேகமாக களமிறங்குவோம். உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளை வேகமாக செய்ய வேண்டும். எதிர்பார்த்து ஏமாற வேண்டாம்: விரைவில் செய்தியாளர்களை சந்திக்கிறேன். பாமக என்பது யாருடைய தனிச்சொத்தும் இல்லை. தொண்டர்களாகிய நீங்கள் தான் பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்புகள் வரும், போகும் தொண்டர்களின் அன்பே நிரந்தரம்”. இவ்வாறு அவர் பேசினார்.