போர்க் காலத்தில் உயிரைக் காக்க தமிழகத்திற்குத் தப்பிச் சென்ற முதியவர் சட்ட விரோதமாக நாட்டை விட்டு வெளியேறியமைக்காக விளக்க மறியளில் வைக்கப்பட்டார்.
1987 ஆம் ஆண்டு தாயகத்தில் இருந்து உயிர் தப்பி தமிழ் நாட்டிற்கு அகதியாகச் சென்றவர் முதுமையில் நாடு திரும்பியபோது சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறிய குற்றச் சாட்டின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
சின்னையா சிறிலோகநாதன் என்னும் ஏழாலையைச் சேர்ந்த 75 வயது முதியவரே இவ்வாறு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இன்று மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோதே விளக்க மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் முற்படுத்தப்பட்ட சந்தேக நபர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் 5 சட்டத்த்ணிகள் ஆயராகினர்.
இதன்போது 1997 ஆம் ஆண்டு ஏழாலையில் இருந்து மன்னார் சென்று அங்கிருந்து 12 ஆயிரம் ரூபா படகிற்கு செலுத்தி சட்ட விரோதமாக கடல் வழியாகவே சந்தேக நபர் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றுள்ளார். இருந்தபோதும் இக் காலத்தில் சட்ட பூர்வமாக பயணிக்கும் வாய்ப்பும் இருந்தமையால் இவர் எதற்காக சட்ட விரோதமாக பயணித்தார் என்பது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதனல் . எனவே சந்தேக நபரை பிணையில் விடுவிக்காது விளக்க மறியலில் வைக்க வேண்டும் எனக் கேட்டு குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் 45/01 கீழ் குற்றம் சாட்டப்படுவதாக அறிக்கை சமர்ப்பித்தனர்.
இதன்போது சந்தேக நபர் சார்பில் ஆயரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாக உயிரை காக்கும் நோக்கில் லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றபோது 1987 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு தப்பிச் சென்றுள்ளார்.
இவ்வாறு தப்பிச் சென்றவர் தமிழகத்தின் திருவண்ணாமலைப் பகுதியில் கண்ணகிபுரம் இலங்கை அகதிகள் முகாமில் தங்கி வாழ்ந்து தற்போது ஏழாலையில் வசிக்கும் தனது மகனுடன் முதுமைக் காலத்தில் வாழ்வதற்காக உரிய முறைகளின் கீழ் விண்ணப்பித்து சட்டபூர்வமாக நாடு திரும்பியுள்ளார்.
முகாமில் அகதியாக வாழ்ந்தார் என ஐக்கிய நாடுகளின் அகதிகளிற்கான உயர்ஸ்தானிகம் வழங்கிய (யு.என்.எச்.சி.ஆர்) பதிவுச் சான்றிதழ், இலங்கை திரும்ப தமிழ்நாடு பொலிஸிற்கு செய்த விண்ணப்பம், அதற்கு தமிழ்நாடு பொலிஸார் அவர் எந்த குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என வழங்கிய சான்றிதழ்களுடன், சென்னையில் உள்ள இலங்கைத் தூத்கத்திற்கு விண்ணப்பித்து இலங்கை திரும்புவதற்காக பெற்றுக்கொண்ட பிரயாண அனுமதி ஆகியவற்றை சரிபார்த்து ஐ.நா அமைப்பே இலவச விமானச் சிட்டையினையும் வழங்கியது அவற்றின் பிரதிகள் மன்றிற்கு சமர்ப்பிக்கப்படுகின்றது. எனவே குற்றஞ் சாட்டப்படுபவரை முழுமையாக விடுவிக்க வேண்டும்.
இலங்கை அகதிகள் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தமிழகத்தில் இருப்பது உலகின் சகல நாடுகளிற்கும் தெரியும் ஆனால் இலங்கைப் பொலிசாருக்குத் தெரியாமல் இருப்பது வேடிக்கையானது. அகதி என்றால் அவன் சொல்லாமல்தான் போவார். அவரை அகதியாக ஏற்றுக்கொண்டால் அவர் பயணித்தமை குற்றமாகாது. அது மட்டுமல்ல ஒரு குற்றவியல் நடவடிக்கையாக இருந்தால் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளிற்குள் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் இங்கே 30 வருடங்களும் கடந்துவிட்டது.
இதேநேரம் இலங்கையில் இருந்து அகிகளாகச் சென்றவர்கள் நாடு திரும்ப வேண்டும் என அரசு உத்தியோகபூர்வமாக அழைக்கின்றது ஆனால் திரும்பியவர்கள் கைது செய்யப்படுகின்றனர் இதற்கு குற்றப் புலனாய்வு அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டி வரும் தப்ப முடியாது.
இதேநேரம் குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் சட்டப்பிரிவு 45/01 இன் கீழ் வழக்குத் தாக்கல் செய்தால் நீதவான் 47/ஏ பிரிவின் கீழ் பிணை வழங்க முடியும் அதனால் முழுமையாக விடுவிக்க முடியாத பட்சத்தில் குற்றம் சாட்டப்பட்டவரை பிணையில் விடுவிக்க வேண்டும் என்றார்.
இவற்றை ஆராய்ந்த நீதவான் ஜே.சுபராஜினி சந்தேக நபரை எதிர் வரும் யூன் மாதம் 5ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டார்.