கால சூழலால் பா.ம.க.வில் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது என்று ஜி.கே. மணி கூறியுள்ளார்.
தைலாபுரத்தில் பா.ம.க கவுரவ தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கால சூழலால் பா.ம.க.வில் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. பா.ம.க. விரிசலுக்கு நான் காரணம் அல்ல. சமூக வலைதளத்தில் பரவும் இந்த தகவலை கேட்டு கண்ணீர் விட்டு அழுதேன். பல ஆண்டுகளாக கட்சியில் உள்ள நான் கட்சி சிதற வேண்டும் என நினைப்பேனா? என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை. ராமதாசும், அன்புமணியும் விரைவில் சந்திக்க விரும்புகிறேன். அவர்கள் சந்தித்து பேச வேண்டும் என்பதே எங்கள் அனைவரது விருப்பம். இருவரும் சந்தித்தால் தொண்டர்கள் உற்சாகம் அடைவார்கள். ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அனைவரது எண்ணம். தொடர்ந்து ராமதாசிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறேன். பொறுப்பாளர்களை மாற்ற வேண்டாம் என்று ராமதாசிடம் வற்புறுத்தினேன். உட்கட்சி பிரச்சனையை வெளியே சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.