தே.மு.தி.க.வுக்கும் எங்களுக்கும் சுமூகமான உறவு நீடிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தி.மு.க. 16 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது ஏன் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவில்லை. ஆட்சி அதிகாரம் இல்லாதபோது வேண்டுமென்றே திட்டமிட்டு பழி சொல்வது தி.மு.க.வின் வாடிக்கை. தே.மு.தி.க.வுக்கும் எங்களுக்கும் சுமூகமான உறவு நீடிக்கிறது. அதை யாராலும் உடைக்க முடியாது. அ.தி.மு.க. எப்போதும், யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை. தி.மு.க.தான் இந்த நாட்டிற்கு துரோகம் செய்துள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் குற்ற செயல்கள் நடைபெற்று வருகிறது. மதுரையில் கால்வாயை திரைசீலை வைத்து மறைத்து வைக்கும் அளவுக்கு அவல ஆட்சி நடக்கிறது.