பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மதக்கலவரங்களை உண்டாக்குவார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. பொதுக்குழுவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மதக்கலவரங்களை உண்டாக்குவார்கள். சாதிக்கலவரங்களை தூண்டுவார்கள். மக்களை அனைத்து வகையிலும் பிளவுபடுத்துவார்கள். நம்முடைய பிள்ளைகளை படிக்க விட மாட்டார்கள். பிற்போக்குத்தனங்களில் நம்மை மூழ்கடிப்பார்கள். தொழில் வளர்ச்சி இருக்காது. இந்தி மொழித் திணிப்பு, பண்பாட்டுத் திணிப்பு செய்து, தமிழ்நாட்டின் தனித்துவத்தையே அழித்துவிடுவார்கள். ஜூன் முதல் வாரத்தில் இருந்து, என்னுடைய பணி என்ன என்றால், கழக நிர்வாகிகளை தொகுதி வாரியாக, அண்ணா அறிவாலயத்தில் நான் சந்திக்க இருக்கிறேன். அப்போது இன்னும் விரைவாக, ஒன் டூ ஒன் பேசுவோம். தலைவர் கலைஞராக இருந்தால், கவிதை எழுதுவார்; கதைகள் எழுதுவார்; சினிமா வசனம் எழுதுவார்; இலக்கிய மேடைகளில் கலக்குவார். எனக்குத் தெரிந்தது, அரசியல் மட்டும்தான். நான் அரசியல் -அரசியல், உழைப்பு – உழைப்பு என்று வளர்ந்தவன். டிவி பார்த்தால்கூட, நியூஸ் சேனல்தான் பார்ப்பேன். சோசியல் மீடியாவை பார்த்தாலும், அரசியல் செய்திகள், பேட்டிகளைத்தான் பார்ப்பேன். திராவிட முன்னேற்ற கழகம் இருக்கும் வரை, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரை, டெல்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! பொதுக்குழுவில் தொடங்கியிருக்கும் இந்தப் பயணத்த – சட்டமன்றத் தேர்தல் வெற்றிவிழாப் பொதுக்கூட்டத்தில் நாம் நிறைவு செய்ய வேண்டும்! அதில் மீண்டும் ஒன்றாக சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.