இசைஞானி இளையராஜா தனது 82-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தேனி மாவட்டத்திலுள்ள பண்ணைப்புரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் இளையராஜா. 1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில், வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம்தான் தனது இசைப்பயணத்தை தொடங்கினார் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார். இவர் 2010-ம் ஆண்டு பத்ம பூஷன் விருதையும் 2018-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதையும் பெற்றார். இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட உள்ளது. ஆசியாவிலேயே முதல் முறையாக “சிம்பொனி” இசை அமைத்தவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இந்த நிலையில், இசைஞானி இளையராஜா இன்று தனது 82-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இளையராஜாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் “நாட்டுப்புற இசை, மெல்லிசை, துள்ளலிசை, மரபிசை, தமிழிசை, மேற்கத்திய இசை என அனைத்திலும் கரைகண்டு தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! தங்களின் ‘சிம்பொனி’ இசை தமிழ்நாட்டில் ஒலிக்கவுள்ள ஆகஸ்ட் 2-ஆம் நாளுக்காகக் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன். நேற்றும் இன்றும் என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்!” என்று பதிவிட்டுள்ளார்.
