முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்ததின்படி ஆண்டுக்கு ரூ.50 லட்சம் செலவில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்பட 10 கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு தினமும் காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இத்திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று காலை தொடங்கி வைத்து கோவில் பொது தரிசனப்பாதையில் வரும் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பாலை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குட முழுக்கு பணிகளை இரவு 8 மணியில் இருந்து 12 மணி வரை ஆய்வு செய்தோம்.
நடைபெறுகின்ற கட்டுமான பணிகள், பக்தர்களுக்கு தேவைப்படுகின்ற கூடுதல் வசதிகளை கூட்டம் இல்லாத போது ஆய்வு செய்தால்தான் முழு அளவிளான விபரங்கள் தெரியவரும் என்பதால் கூட்டம் இல்லாத நேரமான நேற்று இரவு முழுவதும் ஆய்வு செய்தோம். சட்டமன்ற அறிவிப்பின்படி காய்ச்சிய சுடு பால் வழங்கப்படும் என்ற முதலமைச்சர் உத்தரவின் பேரில் அறிவித்திருந்த 10 கோவில்களுக்கு இன்றைய தினம் அந்த திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. கோவிலில் நடைபெறுகின்ற திருப்பணிகள், முடி காணிக்கை மண்டபம், அதே போல் நாழி கிணறு செல்லும் பாதையில் உள்ள மண்டபம், அறுபடை வீடுகளை ஒன்றாக பிரதிஷ்டை செய்து அந்த அறுபடை வீடுகளையும் தரிசித்து செல்லுகின்ற சூழல் அதேபோல் பக்தர்கள் தங்கும் விடுதி பக்தர்களுக்கு ஏற்படுத்தப் பட்டிருக்கின்ற கியூ லைன், அந்த கியூ லைனில் பக்தர்களுக்கு தேவைப்படுகின்ற குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், விழாக் காலங்களில் போக்குவரத்து நிறுத்தும் இடங்கள் சுமார் 4 இடங்களை நேற்று இரவு ஆய்வு செய்தோம். சுமார் 20 ஆயிரம் வாகனங்கள் வந்தாலும் நிறுத்தக் கூடிய அளவுக்கு போக்குவரத்து வசதியை மேம்படுத்த முதலமைச்சர் உத்தரவின் பேரில் அந்த இடங்களையும் ஆய்வு செய்தோம். ஜூலை 7ம் தேதி நடக்கின்ற கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த குடமுழுக்கிற்கு முன்பு எவ்வளவு பணிகள் முடிக்க முடியுமோ அந்த பணிகள் போர்கால அடிப்படையில் நடத்தப்படும். இந்த ஆய்வு கும்பாபிஷேகத்திற்கு முன்பாக ஒரு 4 முறையாவது அனைத்துத் துறை அலுவலர்களோடு இந்த மாவட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி.யும் அடுத்து நடக்கின்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பார்கள். அவர்களும்இந்த திருப்பணிக்கு முழு உதவியாக இருக்கின்றார்கள். எனவே இந்த திருப்பணி செம்மையாக நேர்த்தியாக எங்கு பார்த்தாலும் அரோகரா சத்தம் கேட்கின்ற அளவுக்கு இந்த கும்பாபிஷேகம் சீறோடும் சிறப்போடும் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.