– யாழ். வடமராட்சி ஊடக இல்லம் சுட்டிக்காட்டு!
ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல் தொடர்ந்து வருகின்றமைக்கு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்கும் விடயத்தில் ஆட்சிகள் மாறினாலும் பாராமுகமாக செயற்பாட்டு வருகின்றமையே காரணம் என யாழ் வடமராட்சி ஊடக இல்லம் சுட்டிக்காட்டியுள்ளது.
யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் மே மாதம் 31ம் திகதி சனிக்கிழமையன்று மாலை இடம்பெற்ற, சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை நடேசன் அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் அஞ்சலி உரை நிகழ்த்திய யாழ் வடமராட்சி ஊடக இல்ல செயலாளர் இரா.மயூதரன் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமராட்சியை சேர்ந்த நடேசன் அவர்கள் மட்டக்களப்பில் வாழ்ந்து வந்த நிலையில் தென் தமிழீழ மக்களுக்காக துணிச்சலுடன் செயற்பட்டு ஊடக செயற்பாட்டின் மூலம் துணநின்றவர். அதன் காரணமாக பல சந்தர்ப்பங்களில் நேரடியாகவும், தொலைபேசி ஊடாகவும் உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்ட போதிலும் ஓய்ந்து ஒதுஙகாது இறுதி மூச்சு உள்ளவரை ஊடகப்பணி ஆற்றியவர் நடேசன் அண்ணா. இறுதியாக இதே நாளில் 2004 ஆம் ஆண்டு சிறீலங்கா அரச படைகளோடு சேர்ந்தியஙகிய துணை ஆயுத குழுவினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
இவ்வாறு தமிழர் தாயகத்தில் நாற்பதுக்கு மேற்பட்ட ஊடகவியலாளரகள் கடத்தப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டும், சுட்டுப்படுகொலை செய்யப்பட்டும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் இருக்கிறார்களா இல்லையா என்று தெரியாத நிலைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னலியகொட உள்ளிட்ட சிங்கள ஊடகவியலாளர்களும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர்.
ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்தே வருகிறது. அன்று ஆயுத முனையில் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் இன்று வன்முறை வடிவத்திலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் பெயராலும் தாக்குதல்கள், விசாராணகள் என்ற வடிவங்களில் தொடர்ந்து வருகின்றன. அனுரகுமார திசநாயக்க அரசாங்கம் பொறுப்பேற்று ஆறு மாதங்களை கடந்துள்ள போதிலும் இவ்விடயத்தில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாது பாராமுகமாக செயற்பட்டுவருகின்றது.
பல தசாப்தங்கள் கடந்தும் ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல் தொடர்கின்றமைக்கு முன்னைய படுகொலைகள் உள்ளிட்ட அச்சுறுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் நிதியான விசாரணை எவையும் முன்னெடுக்கப்படவில்லை. அது மாத்திரமல்லாது அவற்றுடன் தொடர்புடையவர்கள் எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆட்சிகள் மாறினாலும் இதே நிலை தொடர்கின்றமையே ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல் இன்றும் தொடர்வதற்கு காரணமாக அமைகின்றது.
இலங்கையின் உள்ளக பொறிமுறைக்குள்ளாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை. சர்வதேச விசாரணை மூலமே உண்மை குற்றவாளிகள் கண்டறியப்பட்டு பாரபட்சமற்ற முறியில் நீதியின் முன் நிறுத்தப்பட முடியும் என்பது யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஆணித்தரமான நிலைப்பாடு ஆகும். அந்த வகையில் தற்போது அமைந்துள்ள அனுரகுமார திசநாயக்க அரசாங்கம் ஆவது அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் ஊடாக ஊடகத்துறையின் சுயாதீனத்தன்மையினை உறுதிசெய்யுமாறு இன்றைய நாளில் யாழ் வடமராட்சி ஊடக இல்லம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றது. என்றார். ஊடகவியலாளர் நடேசனுக்கு வடமராட்சி ஊடக இல்லத்தில் அஞ்சலி!
துணை ஆயுதக்குழுவினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் (31) சனிக்கிழமை யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறையில் அமைந்துள்ள யாழ் வடமராட்சி ஊடக இல்ல அலுவலகத்தில் அன்று மாலை இடம்பெற்ற நிகழ்வில், மட்டக்களப்பில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ் வடமராட்சி ஊடக இல்ல தலைவர் கு.மகாலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஊடக இல்லத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.