தமிழக மாநிலங்களவை எம்.பி.க்களான ம.தி.மு.க.வைச் சேர்ந்த வைகோ, தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க. சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. எனவே அதற்கான தேர்தல், வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதனையடுத்து தி.மு.க. சார்பாக வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோரும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள ஒரு இடம், மக்கள் நீதி மய்யத்திற்கு தி.மு.க. ஒதுக்கி உள்ளது. அதில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று அந்த கட்சி அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? என்பதை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி 19-ந் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக கட்சியின் வக்கீல் பிரிவு செயலாளர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. வரும் 4 ஆம் தேதி திமுக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிகிறது.
