ஐரோப்பிய நாடான இத்தாலியின் சிசிலி தீவில் எட்னா என்ற எரிமலை உள்ளது. ஐரோப்பாவில் மிகவும் செயல்பாட்டில் உள்ள எரிமலை இதுவாகும். இந்த எரிமலை உள்ள பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், இந்த எரிமலை சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் எரிமலையை சுற்றிப்பார்க்க வருகின்றனர். இந்நிலையில், எட்னா எரிமலை நேற்று திடீரென வெடித்தது. கரும்புகையுடன், எரிமலை கற்கள் வெடித்து சிதறி லாவா குழம்பு வெளியேறி வருகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் எரிமலையில் இருந்து அலறியடித்து ஓடினர். எரிமலை வெடிப்பால் சிசிலி தீவில் இருந்து சுற்றுலா பயணிகள் வெளியேறி வருகின்றனர். அதேவேளை, எரிமலை வெடிப்பு வழக்கமான ஒன்றுதான் என்றும் மிகப்பெரிய அச்சுறுத்தல் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எரிமலையை சுற்றியுள்ள மக்கள் யாரும் இதுவரை வெளியேற்றப்படவில்லை. எரிமலை வெடிப்பால் உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
